டக்ளஸிடம் இருந்து அநுரவிற்கு பறந்த அவசர கடிதம்!
வடக்கு கிழக்கு கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் கடல் வளத்தினையும் பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து பேரழிவை தடுக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிற்கு (Anura Kumara Dissanayake) ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
குறித்த கடித்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "இலங்கைக் கடற்பரப்புக்குள் எல்லைத் தாண்டியதும், சட்டவிரோதமானதுமான இந்திய இழுவை மடி வலைப் படகுகளின் தொழில் செயற்பாடுகள் காரணமாக எமது கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரங்களும், கடல் வளமும் பாரியளவில் பாதிக்கப்பட்டு வருவதை நீங்கள் நன்கு அறிவீர்கள்.
இத்தகைய செயற்பாடுகளை நிறுத்துவதற்கு நாமும் பல்வேறு முயற்சிகளை எடுத்திருந்தும், அவை முழுமை பெறவில்லை.
சட்ட நடவடிக்கை
தற்போது மீனினங்களின் இனப் பெருக்கக் காலம் என்பதால் இந்திய கடற்றொழிலாளர்கள் எமது கடற் பரப்புக்குள் தொழில் நிமித்தம் வருவதில்லை. இது ஒவ்வொரு வருடமும் நிகழ்வதாகும்.
அந்த வகையில் இந்த வருடம் இக்காலகட்டம் கடந்த ஏப்ரல் மாதம் 15ஆம் திகதி தொடங்கி எதிர்வரும் 15ஆம் திகதி முடிவடைகின்றது.
இந்த காலகட்டம் முடிவடைந்த நிலையில் - அதாவது எதிர்வரும் 15ஆம் திகதிக்குப் பின்னர் ஆயிரக் கணக்கிலான இந்திய இழுவை மடி வலைப் படகுகள் இலங்கை கடற் பரப்புக்குள் நிச்சமயாக வரும்.
எனவே, இவ்விடயம் தொடர்பில் தங்களது அவதானத்தைச் செலுத்தி, ஒரு பக்கத்தில் இது தொடர்பிலான இராஜதந்திர ரீதியிலான பேச்சுவார்த்தைகளை இந்திய அரசுடன் மேற்கொண்டும், மறு பக்கத்தில் இலங்கையில் சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டும், இந்திய இழுவை மடி வலைப் படகுகளின் இலங்கைக் கடற் பரப்பிற்குள்ளான செயற்பாடுகளை கட்டுப்படுத்துமாறு கேட்டுக் கொள்கின்றேன்" என்று குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
