அமெரிக்காவின் AI இராணுவ இலக்கு! பென்டகனுடன் இணைக்கப்பட்ட 7' வலைப்பின்னல்கள்
அமெரிக்கப் பாதுகாப்புத் தலைமையகமான பென்டகன், நாட்டின் உயர்மட்டப் பாதுகாப்பு வலைப்பின்னல்களில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்காக உலகின் முன்னணி ஏழு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளதாக வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.
இதன்படி SpaceX, OpenAI, Google, NVIDIA, Reflection, Microsoft மற்றும் Amazon Web Services ஆகிய நிறுவனங்கள் பென்டகனின் மிக இரகசியமான 'லெவல் 6' மற்றும் 'லெவல் 7' வலைப்பின்னல் தளங்களில் ஒருங்கிணைக்கப்பட உள்ளன.
தரவுகளைத் துல்லியமாகத் தொகுக்கவும், போர்க்களச் சூழல்களைத் தெளிவாகப் புரிந்துகொண்டு வீரர்கள் விரைவான முடிவுகளை எடுக்கவும் இந்த மேம்பட்ட AI தொழில்நுட்பங்கள் உதவும் என்று பென்டகன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
AI இராணுவம்
குறிப்பாக அமெரிக்க இராணுவத்தை ஒரு 'AI-முதல்' படையாக மாற்றுவதே இந்த முயற்சியின் நோக்கம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை , மற்றொரு முன்னணி AI நிறுவனமான Anthropic, இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான பாதுகாப்பு விதிகள் தொடர்பான சர்ச்சையில் சிக்கியுள்ளது.
இதன் காரணமாக, கடந்த மாதம் பென்டகன் அந்நிறுவனத்தைச் சப்ளை-செயின் அபாயமாக பட்டியலிட்டு, அதன் சேவைகளைப் பயன்படுத்தத் தடை விதித்தது.
இதற்கிடையில், கூகுள் நிறுவனம் பென்டகனுடன் செய்துகொண்டுள்ள ஒப்பந்தத்தின்படி, அரசாங்கத்தின் எந்தவொரு சட்டபூர்வமான நோக்கத்திற்காகவும் அதன் AI மாதிரிகளைப் பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இது எலான் மஸ்க்கின் xAI மற்றும் OpenAI நிறுவனங்கள் ஏற்கனவே மேற்கொண்டுள்ள ஒப்பந்தங்களுக்கு இணையாக அமைந்துள்ளது.
இந்தத் தொழில்நுட்பக் கூட்டணி, எதிர்காலப் போர்க்களங்களில் அமெரிக்காவின் மேலாதிக்கத்தை உறுதிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, சிக்கலான இராணுவ நடவடிக்கைகளின் போது இந்த AI கருவிகள் வழங்கும் தரவுப் பகுப்பாய்வு, மனிதத் தவறுகளைக் குறைக்கவும் போர் வியூகங்களை வலுப்படுத்தவும் உதவும் என்று பாதுகாப்பு வல்லுநர்கள் கருதுகின்றனர்.