கொண்டாட்டத்திற்கு தயாராகும் ரணில் தரப்பு
76 ஆவது ஆண்டு நிறைவு நாள்
ஐக்கிய தேசியக் கட்சி உருவாக்கப்பட்டு 76 ஆவது ஆண்டு நிறைவு நாள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படவுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், நாட்டின் அதிபருமான ரணில் விக்ரமசிங்க தலைமையில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் ஆண்டு நிறைவு விழா நடைபெறவுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் 76 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் கொழும்பில் நடைபெற்று வருவதாக ஐக்கிய தேசியக் கட்சி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
1946இல் ஸ்தாபிப்பு
கட்சியின் மூத்த உறுப்பினர்கள், மக்கள் பிரதிநிதிகள், தொழில் வல்லுநர்கள் மற்றும் தொழிற்சங்க உறுப்பினர்கள் இந்நிகழ்வில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐக்கிய தேசியக் கட்சியானது 1946 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 6 ஆம் திகதி இலங்கையின் முதல் பிரதமரான டொன் ஸ்டீபன் சேனாநாயக்கவினால் ஸ்தாபிக்கப்பட்டது.
ஐக்கிய தேசியக் கட்சியின் 76ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வேளையில், தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டைக் காப்பாற்றுவதற்கான பாரிய சீர்திருத்த நிகழ்ச்சி நிரலை கட்சியின் தலைவரும், அதிபருமான ரணில் விக்ரமசிங்க முன்னெடுத்து வருகின்றார்.
நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு அதிக எண்ணிக்கையிலான முற்போக்கான சீர்திருத்தங்கள் மற்றும் வேலைத்திட்டங்களை அறிமுகப்படுத்திய கட்சியாகவும் ஐக்கிய தேசிய கட்சி திகழ்கின்றது.

