எல்லை தாண்டிய மீன்பிடி! 09 இந்திய கடற்றொழிலாளர்கள் நிபந்தனை அடிப்படையில் விடுதலை
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் கடந்த ஜூலை மாதம் 22 ஆம் திகதி தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டு தொடர்ச்சியாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 09 இந்திய கடற்றொழிலாளர்களையும் விடுதலை செய்ய மன்னார் மேலதிக நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த நிலையில் தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து இந்திய இழுவைப் படகு ஒன்றுடன் 9 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்கள் தலைமன்னார் கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
தலைமன்னார் கடற்படையினர் விசாரணைகளின் பின்னர் மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
நீதிமன்ற உத்தரவு
கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளின் பின்னர் மன்னார் நீதிமன்றத்தில் முற்படுத்திய நிலையில் குறித்த 9 கடற்றொழிலாளர்களும் தொடர்ச்சியாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் குறித்த 9 கடற்றொழிலாளர்களும் நேற்றையதினம் வியாழக்கிழமை (03) மன்னார் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர்.
இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட மேலதிக நீதிவான், 1 ஆம் மற்றும் 2 ஆம் குற்றச்சாட்டுக்களுக்கு 12 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 10 வருட சிறை தண்டனையும், 3 ஆவது குற்றச்சாட்டுக்கு நபர் ஒருவருக்கு 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் குற்றப் பணமும் செலுத்த உத்தரவிட்டார்.
மேலும் ஏற்கனவே இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட கடற்றொழிலாளர் ஒருவருக்கு இரண்டாவது முறையாக இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடித்த குற்றச்சாட்டுக்காக 25 ஆயிரம் ரூபாய் குற்றப்பணம் செலுத்தப்பட்ட நிலையில் மேலதிகமாக 2 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் செலுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில் குறித்த 9 கடற்றொழிலாளர்களும் நிபந்தனையின் அடிப்படையில் மன்னார் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |