இலங்கையில் சில எரிபொருட்களுக்கு தட்டுப்பாடு : வெளியான அறிவிப்பு
இலங்கையின் பல எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் 95 ரக ஒக்டேன் பெட்ரோல் மற்றும் சுப்பர் டீசல் கையிருப்பு இல்லை என பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
95 ரக ஒக்டேன் பெட்ரோல் மற்றும் சுப்பர் டீசல் கையிருப்பை பராமரிக்க 3 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமாக முதலீடு செய்ய வேண்டியிருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனினும் அந்த எரிபொருளை விற்பனை செய்வதன் மூலம் பெருநிறுவன எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்குக் கிடைக்கும் இலாபம் சுமார் 45,000 ரூபாயாக மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
எரிபொருள் நிரப்பும் நிலையங்கள்
எனவே நாடு முழுவதும் உள்ள பல எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் இந்த இரண்டு வகை எரிபொருட்களும் கிடைப்பதில்லை என்றும் பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் கூறியுள்ளது.

95 ரக ஒக்டேன் பெட்ரோல் மற்றும் சுப்பர் டீசலின் தினசரி விற்பனை 500 லீற்றருக்கும் குறைவாக இருப்பதால், ஒரு கையிருப்பை விற்க இரண்டு வாரங்களுக்கு மேல் ஆகிறது என குறிப்பிட்டுள்ளது.
மேலும் 45,000 ரூபாய் தள்ளுபடித் தொகை ஊழியர்களின் சம்பளத்தைக் கொடுக்கக் கூடப் போதுமானதாக இல்லை என்றும் அந்தச் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம்
அத்துடன் இந்த இரண்டு வகை எரிபொருட்களுக்கும் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் வழங்கும் சதவீதத்தை விட இரண்டு மடங்குக்கும் அதிகமான தள்ளுபடியை வெளிநாட்டு எரிபொருள் நிறுவனங்கள் விநியோகஸ்தர்களுக்கு வழங்கி வருவதாகவும், அதிகபட்ச சில்லறை விலையில் 3 சதவீத தள்ளுபடி அளிப்பதாகவும் சங்கம் குறிப்பிடுகிறது.

இதன் காரணமாக, கொழும்புக்கு வெளியே உள்ள பகுதிகளில் பல கூட்டுத்தாபன எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் 95 ரக ஒக்டேன் பெட்ரோலும் சுப்பர் டீசலும் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில் நவீன வாகனங்களைப் பயன்படுத்தும் நுகர்வோர் பெரும் சிரமத்தை எதிர்கொள்கின்றனர் என்றும் சங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |