09 ஆவது நிறைவேற்று அரச தலைவர் யார் -சஜித் -டலஸ் கடும் போட்டி
சஜித் - டலஸ் பெயர்கள் பரிந்துரை
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ (13) பதவி விலகியதன் பின்னர் புதிய அரச தலைவரை நியமிக்க எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டலஸ் அழகப்பெரும ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்றத்தில் பிளவை ஏற்படுத்தாமல் உடன்படிக்கையின் மூலம் இந்த இருவரில் ஒருவரை அரச தலைவராக நியமிப்பது தொடர்பில் அரசியல் கட்சித் தலைவர்களுக்கு இடையில் கலந்துரையாடல் ஆரம்பமாகியுள்ளது.
இது தொடர்பான விஷேட கலந்துரையாடல் நேற்று (10) பிற்பகல் நுகேகொடையில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரலவின் வீட்டில் ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, அனுர பிரியதர்ஷன யாப்பா தலைமையிலான சுயேச்சைக் குழு உட்பட பல கட்சிகள் மற்றும் குழுக்களிடையே நடைபெற்றது.ஒன்பது கூட்டுக் கட்சிகள் அடங்கிய குழு இதில் பங்கேற்றதாக தெரிய வந்தது.
பாரிய அரசியல், பொருளாதார நெருக்கடி
நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய அரசியல், பொருளாதார நெருக்கடிகளை கருத்திற் கொண்டு நாடாளுமன்றத்தில் பிளவை ஏற்படுத்தாமல் இந்த இருவரில் ஒருவரை அரச தலைவராகவும் மற்றையவரை பிரதமராகவும் நியமிப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதேவேளை, ஒன்பது கூட்டுக் கட்சிகள் அடங்கிய குழு நேற்று காலை இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையகத்தில் கூடி இது தொடர்பில் கலந்துரையாடியது.
அத்துரலியே ரத்ன தேரர், விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார, பேராசிரியர் திஸ்ஸ விதாரண, டியூ குணசேகர, விசேட வைத்திய கலாநிதி ஜி.வீரசிங்க, வீரசுமண வீரசிங்க, பிரேமநாத் டோலவத்த, மொஹமட் முஸம்மில், ஏ.எல்.எம்.அதாவுலா, மற்றும் கெவந்து குமாரதுங்க ஆகியோர் பஙகேற்றனர்.
இந்த கலந்துரையாடலில் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை உடனடியாக பதவி விலகுமாறு வற்புறுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கட்சித் தலைவர்களின் விசேட கலந்துரையாடல்
இதேவேளை, புதிய அரச தலைவர் மற்றும் பிரதமரை நியமிப்பது தொடர்பில் நாடாளுமன்றத்தில் கட்சித் தலைவர்களின் விசேட கலந்துரையாடல் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று (11) சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெறவுள்ளது.
கோட்டாபய ராஜபக்ச நாளை மறுதினம் தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக சபாநாயகருக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் சபாநாயகர் பதில் அரச தலைவராக நியமிக்கப்படுவார் எனவும் புதிய அரச தலைவரை நியமிக்க நாடாளுமன்றம் இந்த வாரம் அல்லது அடுத்த வாரம் கூடும் எனவும் அறியமுடிகின்றது.
அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய இடைக்கால அரசாங்கம் அமைப்பது தொடர்பில் அரசியல் கட்சித் தலைவர்களுக்கு இடையில் பல சுற்றுக் கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளன.
இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று, அரச தலைவர் பதவிக்கு டலஸ் அழகப்பெருமவின் ஆதரவை பெற்றுக்கொள்ளும் முயற்சியில் தற்போது ஈடுபட்டுள்ளதாக தெரியவருகின்றது.