கடலில் விழுந்த 17 கொள்கலன்களில் ஒன்று கரையொதுங்கியது : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கொழும்பு துறைமுகத்திற்கு மேற்கே உள்ள கடல் பகுதியில் வணிகக் கப்பல் ஒன்றிலிருந்து கடலில் விழுந்த 17 வெற்றுக் கொள்கலன்களில் ஒன்று கரை ஒதுங்கியுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பெந்தோட்டை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட இந்துருவை - அதுருவெல்ல கடற்கரையில் இன்று (2) காலை குறித்த கொள்கலன் கரை ஒதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில் இவ்வாறு கரை ஒதுங்கியுள்ள கொள்கலன் அருகே பொதுமக்கள் யாரும் நெருங்க வேண்டாம் என்றும் காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
கடற்படையினர் வேண்டுகோள்
கொழும்பு துறைமுகத்திலிருந்து மேற்கு திசையில் சுமார் 17 கடல் மைல் தொலைவில் விழுந்த இந்தக் கொள்கலன்கள், வீசும் காற்று மற்றும் கடல் நீரோட்டத்தின் திசைக்கு ஏற்ப சிலாபம், நீர்கொழும்பு மற்றும் பேருவளை வழியாகக் காலிக்கு அருகிலுள்ள கடல் பகுதிகளை நோக்கித் தெற்கு திசையில் மிதந்து செல்ல அதிக வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக, கொழும்பிலிருந்து காலி வரையிலான தெற்கு கடல் பகுதியில் கடற்றொழிலில் ஈடுபட்டுள்ள மற்றும் பயணிக்கும் அனைத்துப் படகுகளும் தீவிர அவதானத்துடன் இருக்குமாறு கடற்படையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மிதந்து கொண்டிருக்கும் இந்தக் கொள்கலன்கள் படகுகளுடன் மோதினால் பாரிய விபத்துகள் ஏற்படக்கூடிய அபாயம் உள்ளதால், படகுகளை இயக்கும் போது மிகவும் விழிப்புடன் இருக்குமாறு கடற்றொழிலாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், கடலில் மிதக்கும் கொள்கலன்கள் ஏதேனும் தென்பட்டால், உடனடியாக அது குறித்துக் கடற்றொழில் திணைக்களத்தின் வானொலித் தொடர்பாடல் மையங்களுக்கும் காவல்துறையினருக்கும் தகவல் தெரிவிக்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |