மஸ்கெலியாவில் பொறியில் சிக்கிய சிறுத்தை உயிரிழப்பு
மஸ்கெலியா (Maskeliya) காவல்துறை பிரிவிற்குட்பட்ட மவுஸ்ஸாக்கலை தோட்டத்தில் சிறுத்தை புலியொன்று கம்பியில் சிக்கி, உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டதாக நல்லதண்ணி வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேற்படி சிறுத்தைப்புலி கம்பியில் சிக்கியிருப்பதை அறிந்த அப்பகுதியினர் இன்று (01.09.2024) காலை தோட்ட அதிகாரிக்கு தகவல் வழங்கியதையடுத்து, அவர் மஸ்கெலியா காவல்துறைக்கு இது தொடர்பில் தெரியப்படுத்தியுள்ளார்.
வனவிலங்கு அதிகாரிகள்
இதனையடுத்து காவல்துறையினர் மற்றும் வனவிலங்கு அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சிறுத்தைப் புலியை மீட்டுள்ளனர்.
மரக்கறி தோட்டத்தை, மிருகங்களிடமிருந்து பாதுகாக்கும் நோக்கில் போடப்பட்டிருந்த கம்பி வலையிலேயே இச்சிறுத்தைப்புலி சிக்கி உயிரிழந்துள்ளது.
உயிரிழந்த சிறுத்தையை ஹட்டன் (Hatton) நீதவானின் உத்தரவின் பேரில் பிரேத பரிசோதனைக்காக ரந்தெனிகல வனவிலங்கு கால்நடை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் நல்லதண்ணி வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |