11 மாத பெண்குழந்தையுடன் இளம்தாய் மாயம் - முன்னாள் இராணு வீரர் கைது
அங்குருவாதோட்டை, உருதுதாவ பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய ஒரு பிள்ளையின் தாய் தனது 11 மாத பெண் குழந்தையுடன் காணாமல் போயுள்ளதாக அங்குருவத்தோட்ட காவல்துறையில் அவரது கணவனால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் பெண்ணின் உறவினரான முன்னாள் இராணுவ வீரர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பெண்ணின் வீட்டில் சில மங்கலான இரத்தக் கறைகளும் காணப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
வீட்டை சோதனையிட்ட காவல்துறை

வாசனா குமாரி என்ற 24 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயும், அவரது 11 மாத மகளும் நேற்று (18) பிற்பகல் முதல் காணாமல் போயுள்ளதாக அவரது கணவர் அங்குருவாதொட்ட காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளார்.
அதன்படி விசாரணையை ஆரம்பித்த காவல்துறை சோகோ அதிகாரிகள் இன்று பிற்பகல் குறித்த வீட்டை சோதனையிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மங்கலான இரத்தக் கறைகள்

குளிர்சாதனப் பெட்டியின் கதவிலும் வீட்டின் தரையிலும் சில மங்கலான இரத்தக் கறைகளை காவல்துறையினர் அவதானித்தனர். மேலும் வீட்டின் கழிப்பறை குழி மற்றும் அதை சுற்றியுள்ள வனப்பகுதிகளிலும் காவல்துறையினர் சோதனை நடத்தினர்.
எனினும் இருவரையும் காணவில்லை என்பதால் தற்போது காவல்துறையினர் விசாரணையை விரிவுபடுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உறவினரான முன்னாள் இராணுவ வீரர் கைது

இச்சம்பவம் தொடர்பாக தனது சகோதரியின் கணவர் மீது சந்தேகம் இருப்பதாக காணாமல் போன வாசனாவின் கணவர் கூறுகிறார்.
இது குறித்து அவர் காவல்துறையில் முறைப்பாடு அளித்ததையடுத்து, காவல்துறையினர் அந்த நபரை தற்போது கைது செய்துள்ளனர்.
அவர் ஒரு முன்னாள் இராணுவ வீரர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.