இலங்கையின் தேசிய பாதுகாப்பு தொடர்பில் மீளாய்வு
இலங்கையின் தேசிய பாதுகாப்பு தொடர்பில் மீளாய்வு செய்யவுள்ளதாக சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இதற்காக ஓய்வுபெற்ற சிறிலங்கா இராணுவ மேஜர் ஜெனரல் சன்ன குணதிலக்க தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அதன் அறிக்கை கிடைத்த பின்னர் தேசிய பாதுகாப்பு சபையின் நவீன பாதுகாப்பு கொள்கைகளை தயாரிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் அதிபர் தெரிவித்தார்.
நேற்று மாலை பூஸ்ஸ கடற்படை உயர் பயிற்சி நிலையத்தில் இடம்பெற்ற சிறிலங்கா கடற்படையின் தொண்டர் படையணிக்கு அதிபர் வர்ணம் சூட்டும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அதிபர் ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தற்போதைய சவால்களை ஆயுதங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்த முடியாது என்றும் கூறினார்.
இது தொடர்பாக மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில் ,
பாதுகாப்புப் படையினரின் நலன் மற்றும் ஓய்வுக்காலத்தைப் பாதுகாப்பதில் சிறிலங்கா அரசாங்கம் கரிசனை கொண்டுள்ளது.
இலங்கையின் பாதுகாப்பு தொடர்பில் அதிக கவனம்

புதிய தேசிய பாதுகாப்பு மீளாய்வில் இதனை நான் உள்ளடக்க எதிர்பார்க்கின்றேன். உலகின் மிக முக்கியமான வர்த்தகப் பாதையான இந்து சமுத்திர பிராந்தியத்தில் அமைந்துள்ளமையினால் இலங்கை ஒரு முக்கிய இடத்தை வகிக்கிறது.
அதிகாரப் போட்டி மற்றும் பக்கசார்பு இன்றி நாம் முன்னேற வேண்டும் இதனால் இலங்கையின் பாதுகாப்பு தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
பல நாடுகள் உள்நாட்டு அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றன.இந்த வகையில் இலங்கையும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் போன்ற சில உள்நாட்டு அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள நேரிட்டது. எனவே இதற்கு நாமும் தயாராக வேண்டும்.
மீளாய்வின் அவசியம்

எமது நாட்டின் எதிர்கால தேசிய பாதுகாப்பு குறித்து மீளாய்வு செய்ய நான் எதிர்பார்க்கிறேன். ஐரோப்பாவில் உள்ள ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு ஐந்து அல்லது பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை இத்தகைய மீளாய்வை செய்து வருகின்றன.
நாட்டிற்கு எத்தகைய அச்சுறுத்தல்கள் உள்ளன? நாட்டின் வளங்கள் என்ன?அவற்றை எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்பது குறித்து அவர்கள் மீளாய்வு நடத்துகின்றனர். அதற்கேற்ப அவர்களது இராணுவ பலத்தையும் பொருளாதார பலத்தையும் ஒப்பிட்டு பார்த்து தீர்க்கமான முடிவுகள் பல எடுக்கப்பட்டு வருகின்றன.
நாமும் அது குறித்து கவனம் செலுத்த வேண்டும்.
நவீன பாதுகாப்பு கொள்கை

இன்று, டோனர் போன்ற பல நவீன தொழில்நுட்ப சாதனங்கள் சந்தையில் உள்ளன.
இந்து சமுத்திரத்தில் நீர்மூழ்கிக் கப்பல்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. எனவே நமது கடல் பாதுகாப்புக்காக நீர்மூழ்கிக் கப்பல்களைக் கட்டுப்படுத்தும் திட்டத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும்.
நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதன் மூலம் துரித வளர்ச்சியை எட்ட முடிந்தால், அதற்குத் தேவையான பணத்தை எம்மால் செலவிட முடியும். ஆகவே தான் , தேசிய பாதுகாப்பு குறித்து மீளாய்வு செய்ய எதிர்பார்க்கிறேன்.
புதிய பொருளாதாரப் போக்குகள் மற்றும் காலநிலை மாற்றம் குறித்து கவனம் செலுத்தி இந்த மீளாய்வு அறிக்கை தயாரிக்கப்பட வேண்டும். அறிக்கை கிடைத்த பிறகு, தேசிய பாதுகாப்பு சபையின் நவீன பாதுகாப்பு கொள்கைகளை தயாரிக்க எதிர்பார்க்கப்படுகிறது.
Defense 2030

“Defense 2030” எனும் இந்த அறிக்கையை தயாரிக்க சிறிலங்கா இராணுவ மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) சன்ன குணதிலக்கவின் தலைமையில் மீளாய்வுக் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. அதற்காக தனியான அலுவலகமும் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.