தேர்தல்கள் ஒத்தி வைப்பு - ஜனநாயகத்திற்கு விழுந்த பாரிய அடி - மகிந்த தேசப்பிரிய
மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் நடத்தப்படாமை ஒரு நாட்டின் ஜனநாயகத்திற்கு விழுந்த பாரிய அடி என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
இந்த வருடத்தில் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் ஒன்றையாவது நடத்துவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒன்றையாவது நடத்துங்கள்

தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ள இரண்டு தேர்தல்களில் குறைந்தபட்சம் ஒன்றையாவது எதிர்வரும் செப்டெம்பர் 15ஆம் திகதி நடைபெறவுள்ள உலக ஜனநாயக தினத்திற்கு முன்னதாக நடத்த முடியும் என நம்புவதாக அவர் குறிப்பிட்டார்.
மக்களின் கட்டுப்பாடின்றி, மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல், ஆளுநர்கள், செயலாளர்கள், ஆணையாளர்கள் நடத்தும் இந்த ஆட்சி சட்டத்திற்கு புறம்பானது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
பொலனறுவையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மஹிந்த தேசப்பிரிய மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பொருளாதார வீழ்ச்சிக்கு

இதேவேளை, தற்போதைய பொருளாதார வீழ்ச்சிக்கு இதுவரை நாட்டை ஆட்சி செய்த அனைத்து அரசியல் கட்சிகளுமே காரணம் என பவ்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. நாட்டில் சரியான அரசியல் வேலைத்திட்டத்தை உருவாக்க மக்கள் அணிதிரள வேண்டும் என அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி அழைப்பு விடுத்துள்ளார்.
தேர்தல் அவசியமில்லை

எனினும், தற்போது தேர்தலை நடத்த வேண்டிய அவசியமில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.