ஈஸ்டர் தாக்குதலுக்கு முன் சஹ்ரானின் சகோதரருடன் ஒரு தேநீர் சந்திப்பு
ஈஸ்டர் தாக்குதலுக்கு முன் சஹ்ரானின் சகோதரருடன் ஒரு தேநீர் சந்திப்பு 2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுக்கு முன்னதாக கிடைத்ததாகக் கூறப்படும் உளவுத் தகவல்கள் எவ்வாறு கையாளப்பட்டன என்பது தொடர்பில் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் அண்மையில் முக்கிய தகவல்கள் முன்வைக்கப்பட்டன.
அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே தொடர்பான வழக்கு செப்டம்பர் 15ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) சார்பில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ், ஈஸ்டர் தாக்குதல்களுக்கு முன்னர் சில உளவுத் தகவல்கள் கிடைத்திருந்தபோதும் அவை உரிய முறையில் பகிரப்பட்டனவா என்பது குறித்து விசாரணைகள் இடம்பெற்று வருவதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
CID தரப்பில் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட தகவல்களின்படி, இராணுவப் புலனாய்வுடன் தொடர்புடைய தகவல் அளிப்பவர் ஒருவரிடமிருந்து சஹ்ரான் ஹாஷிம் மற்றும் அவருடன் தொடர்புடையவர்களின் நடவடிக்கைகள் குறித்து தகவல்கள் கிடைத்திருந்ததாகக் கூறப்பட்டது.
தற்போது கவனம் பெற்றுள்ள விடயம்
மேலும், தாக்குதலுக்கு முன்னதாகவே சில எச்சரிக்கைகள் கிடைத்திருந்ததாகவும், அவை உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு வழிவகுத்தனவா என்பது குறித்து விசாரணைகள் நடைபெறுவதாகவும் அரசுத் தரப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்த விசாரணையில் தற்போது கவனம் பெற்றுள்ள மற்றொரு விடயம், அரச புலனாய்வு சேவையுடன் தொடர்புடையதாகக் குறிப்பிடப்படும் காவல்துறை அதிகாரி ரஞ்சன் செனரத் பண்டார.
அதாவது அவர் சஹ்ரான் ஹாஷிமின் சகோதரரை சந்தித்ததாகக் கூறப்படும் சம்பவமாகும்.
CID தரப்பில் முன்வைக்கப்பட்ட தகவலின்படி, வெளிநாட்டு புலனாய்வுத் தகவல் கிடைத்த பின்னர் அந்த அதிகாரி கிழக்கு மாகாணத்திற்குச் சென்று சஹ்ரானின் சகோதரரை சந்தித்ததாகவும், அங்கு தேநீர் அருந்திய பின்னர் திரும்பியதாகவும் கூறப்பட்டுள்ளது.
தாக்குதல்களுக்கு முன்னரே சஹ்ரான் குழுவினர் தொடர்பான உளவுத் தகவல்கள் கிடைத்திருந்த நிலையில், அவருடைய நெருங்கிய உறவினரை அதிகாரி ஒருவர் சந்தித்ததன் நோக்கம் என்ன? அந்தச் சந்திப்புக்குப் பின்னர் ஏன் உடனடி கைது அல்லது தடுப்பு நடவடிக்கை எடுக்கப்படவில்லை? இவ்வாறான கேள்விகள் அன்று முன்வைக்கப்பட்டன.
குற்றப்புலனாய்வு அறிக்கை
இவை சட்டமா அதிபர் திணைக்களத்தால் குற்றப்புலனாய்வு அறிக்கைகளை மையப்படுத்தி எழுப்பப்பட்ட கேள்விகளாகும்.
இந்த விவகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ரஞ்சன் செனரத் பண்டார விசாரணைக்கு முக்கியமான நபராக இருப்பதாகவும், அவர் நாட்டை விட்டு வெளியேறக்கூடிய வாய்ப்பு இருப்பதாகவும் அரசுத் தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இங்கு குறிப்பாக பல வழக்குகளில் மையப்படுத்திய விடயம் என்பது உளவுத்தகவலில் பின்னணி.அப்படியானால் 2019 ஈஸ்டர் தாக்குதல்களுக்கு முன்னர் உளவுத் தகவல்கள் எந்த அளவில் கிடைத்தன?அவை எந்த அதிகாரிகளுக்கு சரியாக அனுப்பப்பட்டன? தகவல்கள் கிடைத்த பின்னர் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன? சஹ்ரானின் சகோதரரை சந்தித்த அதிகாரி ஏன் கைது நடவடிக்கை எடுக்கவில்லை?
இவ்வாறான கேள்விகளுக்கான பதில்களே, தற்போதைய விசாரணைகளில் முக்கியத்துவம் பெற்றுள்ளன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |