ஆதவ் அர்ஜுனாவை சந்தித்த அர்ச்சுனா எம்.பி.
தமிழக அரசின் பொதுப்பணித் துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா சென்னை தலைமைச் செயலகத்தில் சந்தித்துப் பேசியுள்ளார்.
குறித்த விடயத்தை பொதுப்பணி மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் தமிழ்நாட்டு விஜயம் பாரிய சர்ச்சையை கிளப்பி உள்ள நிலையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
பரஸ்பர நல்லுறவு
இந்நிலையில் ஆதவ் அர்ஜுனாவின் பதிவில், இலங்கை நாடாளுமன்ற எம்.பி இராமநாதன் அர்ச்சுனா அவர்களை இன்று மரியாதை நிமித்தமாக தலைமை செயலகம் அலுவலகத்தில் சந்தித்து உரையாடினேன்.

இரு நாடுகளுக்கு இடையேயான பரஸ்பர நல்லுறவு, தமிழ் மக்களின் நலன், மீனவர் பாதுகாப்பு, ஒன்றுபட்ட வளர்ச்சி ஆகிய விஷயங்கள் குறித்து நட்பு ரீதியாக கலந்துரையாடினோம்.
தமிழ் மக்களின் நல்வாழ்வு மற்றும் வளமான வருங்காலம் என்ற புள்ளியில் ஆரோக்கியமான உறவில் பயணிப்போம் என்று ஒருவொருக்கொருவர் தெரிவித்து மகிழ்ந்தோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |