வடக்கு - கிழக்கில் பக்தர்களின் பங்கேற்புடன் இடம்பெற்ற ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம்
அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர்
வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் சிகர நிகழ்வான ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம் இன்று (12) புதன்கிழமை மதியம் 12 மணிக்கு ஆலயத் தீர்த்தக் கேணியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ வெகு விமர்சையாக நடைபெற்றது.
கடந்த 03 ஆம் திகதி திருக்கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய இப்பெருவிழாவின் 10 ஆம் நாளான இன்று, ஆடி அமாவாசை தினத்தில் தீர்த்தோற்சவம் இனிதே இடம்பெற்றது.
ஆலயத்தில் இடம்பெற்ற விசேட அபிஷேக, பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து, வசந்த மண்டபப் பூஜை நடைபெற்று, சுவாமி வெளிவீதி உலா வந்து வேத பாராயணங்கள் முழங்க, பக்தர்களின் 'அரோகரா' கோஷத்திற்கு மத்தியில் மாமாங்கேஸ்வரர் தீர்த்தக் கேணியில் தீர்த்தோற்சவம் நடைபெற்றது.

தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனிதத் தீர்த்தத்தில் நீராடி இறைவழிபாடு செய்தனர்.
மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றும் ஒருங்கே அமையப்பெற்று, ஸ்ரீ இராம பிரானால் வழிபடப்பட்டதாக வரலாற்றுத் தொன்மையும் புகழும் மிக்க இப் புண்ணிய தலத்தில், ஆடி அமாவாசை தினத்தில் தந்தையை இழந்தவர்கள் பிதுர்கடன் செலுத்தி ஆத்ம சாந்தி பிரார்த்தனைகளில் ஈடுபடுவதும் இவ்வாலயத்தின் தனிச்சிறப்பாகும்.
செய்தி - பவன்
மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயம்
மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் இன்றைய தினம் புதன்கிழமை (12) காலை ஆடி அமாவாசை விசேட பூஜை வழிபாடுகள் திருக்கேதீஸ்வர ஆலய பிரதம குரு கருணாநந்த குருக்கள் தலைமையில் இடம்பெற்றது.

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் இன்று புதன்கிழமை காலை வசந்த மண்டபத்தில் கௌரியுடை திருக்கேதீஸ்வர நாதருக்கு விசேட வசந்த மண்டப பூஜை இடம்பெற்றது.
அதனை தொடர்ந்து சுவாமி உள் வீதி எழுந்தருளி பாலவி தீர்த்தக்கரைக்கு தீர்த்தமாட சென்றார்.
பாலாவி தீர்த்தம் இடம் பெற்றதை தொடர்ந்து சுவாமி வெளிவீதி உலா வந்தார். அதனை தொடர்ந்து பாலாவி தீர்த்த கரையில் இறந்த முன்னோரை நினைவு கூர்ந்து எள்ளும்,தண்ணீரும் தர்ப்பணம் செய்யப்பட்டது.
செய்தி - Nayan
வெருகல் -ஸ்ரீ சித்திரவேதாயுதர் சுவாமி
தமது முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் செய்யும் ஆடி அமாவாசை தீர்த்தமானது திருகோணமலை, வெருகல் -ஸ்ரீ சித்திரவேதாயுதர் சுவாமி தேவஸ்தானத்தில் இன்று புதன்கிழமை (12) காலை இடம்பெற்றது.

இதில் ஆயிரக்கணக்கான சைவ பக்த அடியார்கள் கலந்து கொண்டு வெருகல் -மஹாவலி கங்கை புனித நீரில் தீர்த்தமாடி தமது நேர்ச்சைகளை நிறைவேற்றினர்.
பூஜை வழிபாடுகளை இந்து குருமார் சங்க அமைப்பின் தலைவர் வைத்தீஸ்வரர் சர்மா குருக்கள் நிகழ்த்தினார். இதன்போது முதலில் பூஜை வழிபாடுகள் பின்னர் வசந்த மண்டப பூஜைகள் இடம்பெற்று சாமி வெளி வீதி உலாவந்தது.
பின்னர் சுண்ணம் இடிக்கும் நிகழ்வு நடைபெற்று இறுதியாக தீர்த்தக் கரைக்குச் சென்று தீர்த்தம் இடம்பெற்றது. இந்து மக்கள் ஆடி அமாவசை நாளில் , புனித நீரில் நீராடி முன்னோர்களின் ஆன்மா அமைதிக்காகவும் ,குடும்ப நலனுக்காகவும் வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டது.
செய்தி - Buharys Mohamed
கீரிமலை
ஆடி அமாவாசை பிதிர்க்கடன் நிறைவேற்றும் பூசை வழிபாடுகள் கீரிமலை கண்டகி தீர்த்த கரையில் இன்றைய தினம் புதன்கிழமை நடைபெற்றது.

தந்தையை இழந்தவர்கள் பிதிர்க்கடன் செலுத்தும் விரதாமான ஆடி அமாவாசை விரதத்தினை முன்னிட்டு, தமது பிதிர்க்கடன்களை செலுத்தி கடலில் நீராடினார்கள்.
அதேவேளை மாவிட்டபுர கந்தனின் தீர்த்தோற்சவமும் கண்டகி தீர்த்த கரையில் இடம்பெற்றது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |