பயணிகளும் விபத்துக்களுக்கு காரணகர்த்தாக்களா..!
இரண்டு நாட்களுக்கு முன் மன்னம்பிட்டியில் நடந்த கோரவிபத்தும், அதனால் ஏற்பட்ட உயிரிழப்புக்களும் ஈடுசெய்யப்பட முடியாதவை.
இறந்தவர்களின் ஆன்மா சாந்தி அடையப் பிரார்த்தித்துக்கொள்வது மாத்திரமன்றி , விபத்திற்குரிய காரணங்களைக் கண்டறிந்து கடுமையான சட்டநடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதும் கட்டாயமானது.
விபத்திற்கான காரணங்கள்
இந்த விபத்திற்கான காரணங்களாக இவற்றை கூற முடியும்,
- அதிக வேகம்
- சாரதியின் பொறுப்பற்ற தன்மை
- நடத்துனரும் சாரதியுடன் சேர்ந்து ஊக்குவித்தமை
- சில ஆண்டுகளாக இந்த பேருந்தின் வேகம் தெரிந்தும், பொதுவெளியில் இது தொடர்பாக விமர்சிக்கப்பட்டும் உரிமையாளர் உட்பட போக்குவரத்திற்குப் பொறுப்பான அரச நிறுவனங்களின் அக்கறையின்மை
- குறித்த வீதியில் கடமையில் இருந்த போக்குவரத்துப் காவல்துறையினரின் விலைபோன பணி என பல குற்றச்சாட்டுகள் உள்ளன.
இவை தனிய மன்னம்பிட்டிய விபத்துக்கு மட்டும் காரணம் அல்ல நாடு பூராகவும் அன்றாடம் நாம் நிகழ்கின்ற விபத்துக்கள் ஒவ்வொன்றுக்கும் பின்னால் இவ்வாறான அலட்சிய காரணங்கள் குவிந்து கிடக்கின்றன.
இவை இன்று இந்த நாட்டின் நடைமுறைகளாகிவிட்டது. ஊழல் மோசடிகளால் தின்றுபெருத்த இந்த அதிகாரிகளையும் பொறுப்பானவர்களையும் சட்டத்திற்குமுன் நிறுத்தி தண்டனை அளிப்பதன் மூலமாக மட்டும் மேற்படி பிரச்சனைகளை தீர்த்திடமுடியாது.
மேற்படி குற்றவாளிகளைக் கடந்து, இவ்வாறான பெரு விபத்துகளை ஊக்குவிப்பவர்களாக இருக்கும் பாதிக்கப்பட்ட மற்றும் பாதிக்கப்படும் பயணிகளும் மிக முக்கிய காரணகர்த்தாக்களாக இருக்கின்றனர்.
பயணிகளும் விபத்துக்களுக்கு காரணம்

ஒரு விபத்து செய்தியை அறிந்தவுடன் "எப்ப செய்தி கேட்டாலும், பாத்தாலும் அது விபத்து சம்மந்தமாவே இருக்கு இதுக்கு அவன் காரணம் இவன் காரணம்" என்று வீட்டு முற்றத்தில் திண்ணை கதை பேசி விட்டு பயணம் புறப்படுகையில், அந்த வாகனத்தில் போனால் நேரத்திற்கு சென்று விடலாம் என்ற எண்ணத்தை ஆழ் மனதில் விதைத்தவாறு பயணம் தொடரும் அத்தனை பயணிகளும் இந்த குற்றங்களிற்கு காரணகர்த்தாக்கள் ஆகிறார்கள்.
எவ்வாறு இதற்கு மக்கள் பொறுப்பாளிகளாக முடியும் என்பதற்கு ஒரு சில காரணங்களை முன்வைக்கின்றேன்.
- மிகவேகமாகச் செல்லும் வாகனத்தை அடையாளம் கண்டு அந்த வாகனத்திலே செல்வதையே பயணிகள் விரும்புதல்.
- ஆகக்கூடியது அரை மணி நேர வித்தியாசத்தில் ஒரு வாகனம் இன்னொரு வாகனத்தைவிட முந்திச் சென்று தாம் போகவேண்டிய இடைத்தை அடையும் எனில் அந்தவாகனத்தையே மக்கள் தெரிவு செய்து செல்லுதல்.
- தமது வேகத்தை மக்கள் விரும்புகின்றனர், அதனாலே தமக்கு அதிக பயணிகள் கிடைக்கின்றனர் எனும் பெருமையில் சாரதியும், நடத்துனரும் வேகத்தையே தம் வெற்றியாகக் கொண்டிருத்தல்.
- அவ்வாறு வேகமாகச் செல்லும் பயணத்தை சக நண்பர்களிடம், நாம் உங்களை விட முந்தி வீட்டுக்குச் சென்றுவிட்டோம் எனக் கூறி ஏனையோரையும் மரண பயணத்திற்கு அழைத்தல்.
- வரையறுக்கப்பட்ட வேகத்தில் செல்லும் வாகனச் சாரதியை கிண்டல் செய்தல்.
- நிதானமானப் பயணிக்கும் வாகனத்தை ஏளனம் செய்தல்.
இவ்வாறு இன்னும் பல காரணங்கள் இத்தகைய கோர விபத்துகளிற்கு காரணம் ஆகின்றது.
சிந்தித்துப்பாருங்கள், அரை மணி நேரத்தில் நாம் என்ன ஆட்சியையா பிடிக்க போகின்றோம்?, ஓவ்வொரு வேலைக்கும் அதற்கென்று வரையறுக்கப்பட்ட கால எல்லை உண்டு, வேகத்தை கருத்தில் கொண்டு நாளை விடியும் பொழுதை இருளாக்க நாங்கள் காரணமாகலாமா?
நிதானமாக, வரையறுக்கப்பட்ட இடத்தில் அனுமதிக்கப்பட வேகத்தில் செல்லும் வாகனங்களைக் கிண்டல்களும், நையாண்டிகளும் செய்யும் பயணிகள், வேகத்தினால் ஏற்படும் ஆபத்தைப் புரிந்து ஒரு போதும் சாரதிகளையோ, நடத்துனரையோ கண்டிப்பதும் இல்லை, கடிந்து பேசுவதும் இல்லை.
பொறுமை எங்களுக்கானது
என்றாவது ஒரு நாள் இந்த வாகனம் கட்டுக்கடங்கா வேகத்தில் செல்வதால் இதில் பாதுகாப்பாகப் பயணிக்கமுடியாது எனும் கருத்தை குறித்த சாரதி, நடத்துனர் மற்றும் உரிமையாளருக்குக் கேட்கும்படியாகக் கூறியிருந்தால் நிச்சயம் சாரதிகளின் வேகம் கட்டுப்படும் அல்லவா.
முகத்திற்கு நேராகவே சனநெரிசலாக உள்ளது, வேகம் அதிகமாக உள்ளது உங்கள் வாகனத்தில் எங்களால் பயணம் செய்ய இயலாது என்று கூறினால் வேகத்தை கட்டுப்படுத்தி உரிய முறையில் செல்வதைத் தவிர வேறென்ன செய்ய முடியும் அவர்களால்.
இந்த நாட்டில் அரைமணி நேரம் முன்னதாக ஒரு இடத்தை அடைந்து எந்த ஒரு விடயத்தையும் சாதிக்க முடியாது.
இந்த நாட்டு நடைமுறைகளில் நேரத்திற்கு அவ்வாறான எந்த ஒரு பெறுமதியும் இல்லை செய்வதானால் எந்த பயனும் இல்லை.
இந்த மனநிலையை மாற்றி உரிய வேலைகளை உரிய நேரத்தில் செய்தாலே இங்கு எல்லாம் சரியாக இருக்கும்.
லஞ்சம், கொலை, கொள்ளை,கற்பழிப்பு,போதைப்பொருட்பாவனை, கடத்தல் போன்றவை எப்படி மனித வாழ்க்கைக்கு ஒவ்வாத சட்டவிரோத செயல்களோ வேகத்தை முன்னிலைப்படுத்தி அதனை ஊக்குவிப்பதன் வாயிலாக வீதி விபத்துக்களை ஊக்குவிக்கும் ஒவ்வொரு குடிமகனையும் சட்டவிரோத செயலில் ஈடுபடும் குற்றவாளிகள் என்றே கூற வேண்டும்.
ஒவ்வொரு உயிருக்கும் பெறுமதியுண்டு அதனை வீணே அலற்சியத்தால் அழித்திடல் ஆகாது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள் உணர்ந்து செயற்படுங்கள்.