யாழில் அதிகரிக்கும் விபத்துக்களுக்கு காவல்துறையும் காரணமா : வெளிவரும் உண்மைகள்
யாழில் (Jaffna) அண்மைக்காலமாக இடம்பெற்றுவரும் விபத்துக்களுக்கு காவல்துறையினரும் காரணமாக அமைவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அண்மைக்காலமாக நாடளாவிய ரீதியில் வீதி விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகின்றன. இதனால் மரணங்கள், அங்கவீனங்கள் போன்றன ஏற்படுகின்றன.
அந்தவகையில் இந்த விபத்துக்களுக்கு கட்டாக்காலி கால்நடைகள், மது போதையில் சாரதியம், அவதானமின்மை, வீதி விதிமுறைகளை பின்பற்றாமை, அதிக வேகம் மற்றும் உறக்கம் என்பன காரணங்களாக காணப்படுகின்றன.
காவல்துறையினரின் செயற்பாடு
இந்நிலையில் காவல்துறையினரின் செயற்பாடுகளும் விபத்துகளுக்கு காரணமாக அமைகின்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போக்குவரத்து காவல்துறையினர், வாகனங்களை நிறுத்தக் கூடாத இடங்களான வீதி ஓரத்தில் உள்ள மஞ்சள் கோடு, வீதியின் திருப்பங்கள் போன்ற இடங்களில் நின்று வாகனங்களை மறிக்கின்றனர்.
அத்துடன் இரவு வேளைகளில் கடமையில் இருக்கும் போக்குவரத்து காவல்துறையினர், இருள்சூழ்ந்த இடங்களில் வாகனங்களை நிறுத்திவிட்டு டோர்ச லைட்டின் ஒளியினை வீதியில் செல்லும் சாரதிகளின் கண்களை நோக்கி பாய்ச்சி அவர்களை மறிக்கின்றனர். இதுவும் விபத்துகள் ஏற்பட காரணமாக அமைவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஆபத்தான திருப்பங்கள்
இளவாலை காவல்துறைபிரிவிற்குட்பட்ட பண்டத்தரிப்பு - சித்தங்கேணி வீதியில் இவ்வாறான சம்பவம் இடம்பெற்றுள்ளன. குறித்த பகுதியில் ஆபத்தான இரண்டும் திடீர் திருப்பங்கள் காணப்படுகின்றன.

அந்த திருப்பத்தில் காவல்துறையினர் நிற்பது இரண்டு பக்கத்தில் இருந்து வரும் வாகனங்களின் சாரதிகளுக்கும் தெரியாது. அந்த பகுதியில் சாதாரணமாகவே விபத்துகளும் ஏற்படுவதற்கான சூழ்நிலை அதிகமாக காணப்படுகிறது.
குறித்த பகுதியில் நிற்கும் காவல்துறையினர் ஆபத்தான முறையில் வாகனங்களை மறிப்பது வழமை. வீதியால் வரும் வாகனங்களின் கண்களில் தாங்கள் தென்படாது இருப்பதற்காகவே அந்த பகுதியில் நின்று வாகனங்களுக்கும், சாரதிகளுக்கும், பயணிகளுக்கும் ஏற்படும் ஆபத்தையும் பொருட்படுத்தாமல் வாகனங்களை மறிக்கின்றனர்.
மக்களை மிரட்டுவது
இவ்வாறான பகுதியில் நின்று வாகனங்களை மறிக்கக் கூடாது, அப்படி மறிப்பது வீதி விதிமுறைகளுக்கு எதிரானது, ஆபத்து நிறைந்தது என பலரும் அந்த பகுதியில் நிற்கும் காவல்துறையினருக்கு எடுத்துக்கூறினாலும் காவல்துறையினர் மக்களை மிரட்டுவது போல செயற்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

வீதி விபத்துகளை தவிர்ப்பதற்காக காவல்துறையினரை கடமையில் அமர்த்தும்போது, காவல்துறையிரே விபத்துக்களுக்கு காரணமாக அமைகின்றனர் என்ற விடயமானது மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர், மற்றும் யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் ஆகியோரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
செய்திகள் - கஜிந்தன்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா! 3 நாட்கள் முன்