யாழில் வீதியோர வியாபார நிலையங்களை அகற்ற நடவடிக்கை
மக்கள் போக்குவரத்திற்கு இடையூறாக காணப்படும் தற்காலிக வியாபார நிலையங்களை அகற்றுதல் செயற்றிட்டத்தின் கீழ் முதற்கட்டமாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்புறத்தில் நடைபாதையில் உள்ள வியாபார நிலையங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
இதன்படி, தற்காலிக வியாபார நிலையங்களை அமைத்து வியாபாரத்தில் ஈடுபடுகின்ற அத்தனை வியாபார நிலையங்களையும் அகற்றுவதற்குரிய நடவடிக்கைகளை நல்லூர் பிரதேச சபை மேற்கொண்டுள்ளதாக தவிசாளர் மயூரன் தெரிவித்துள்ளார்.
அதன் பிரகாரம் குறித்த நடைபாதையில் தற்காலிக வியாபார நிலையங்களை அமைத்து வியாபாரத்தில் ஈடுபடுகின்ற அத்தனை வியாபார நிலையங்களையும் எதிர்வரும் 30.07.2025 ஆம் திகதி புதன்கிழமைக்கு முன்னர் அகற்றுமாறும் அதனை மீறி வியாபாரங்களில் ஈடுபடுகின்றவர்களின் அத்தனை வியாபார நிலையப் பொருட்களும் எதிர்வரும் 30.07.2025 ஆம் திகதி புதன்கிழமை சபையினால் கையகப்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
வாகனங்கள் நிறுத்த தடை
அத்துடன் குறித்த நடைபாதையில் பயணிப்பவர்களுக்கு இடையூராக இருக்கின்ற அத்தனை விடயங்களையும் அகற்றுவதோடு நடைபாதையில் வாகனங்கள் நிறுவத்துவதும் முற்றாக தடை செய்யப்படவுள்ளதாக கூறியுள்ளார்.
அத்தோடு குறித்த அறிவித்தலினை மீறி வாகனங்களை நிறுத்துவோர் மீது போக்குவரத்துப் பொலிசார் ஊடாக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

