அரசியல் கைதிகளின் நம்பிக்கை மரணித்தது- கௌரி சங்கரி தவராசாவிற்கு இரங்கல்!
அவசரகாலச் சட்டம் மற்றும் பயங்கரவாதத் தடைச் சட்டம் போன்றவற்றின் கீழ் கடந்த காலங்களில் கைது செய்யப்பட்டு பல வருடங்களாக சிறையில் உள்ள தமிழ் இளைஞர், யுவதிகளின் விடுதலைக்காகவும், அரசியல் கைதிகளுக்காகவும் மிக நீண்ட காலமாக செயல்பட்டு வந்த சிரேஷ்ட சட்டத்தரணி திருமதி கௌரி சங்கரி தவராசாவின் திடீர் மரணம் தமிழ் மக்களுக்கு பாரிய இழப்பு என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
சிரேஷ்ட சட்டத்தரணி திருமதி கௌரி சங்கரி தவராசாவின் திடீர் மரணம் குறித்து அவர் இன்று விடுத்துள்ள இரங்கல் செய்தியிலேயே இவ்வாறு தெரிவித்துளண்ளார்.
தொடர்ந்தும் தெரவித்த அவர்,
சிறையில் தடுத்து வைக்கப்படுகின்ற தமிழ் இளைஞர், யுவதிகளின் விடுதலைக்காகவும், அரசியல் கைதிகளின் விடுதலைக்காகவும் நீண்ட காலமாக செயல்பட்டு வந்திருந்தவர் சிரேஷ்ட சட்டத்தரணி திருமதி கௌரி சங்கரி தவராசா. இவரின் இழப்பு தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக நம்பி இருந்தவர்களுக்கு பாரிய இழப்பாகவே அமைந்துள்ளது.
ஆட்கடத்தல்,காணாமல் ஆக்கப்பட்டமை மற்றும் அரசியல் படுகொலைகள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளுக்காக உயர்நீதிமன்றத்தில் வாதாட்டங்களை முன்வைத்து உள்நாட்டிலும்,வெளி நாடுகளிலும் பேசப்பட்ட ஒரு பிரபல சட்டத்தரணி திருமதி கௌரி சங்கரி தவராசா.
என்னை அவசர கால சட்டத்தின் கீழ் கைது செய்த போது எனது விடுதலைக்காக நீதிமன்றத்தில் வாதாடி என்னை பிணையில் செல்ல அனுமதி பெற்றுத் தந்தவர். அவரின் இழப்பை ஈடு செய்ய முடியாத நிலையில் நாம் உள்ளோம்.
அவரை இழந்து நிற்கும் கணவர் கே.வி.தவராசா மற்றும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவிப்பதோடு அவரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.