ஆப்கானிஸ்தான் சுதந்திர தின கொண்டாட்டத்தில் தலிபான்களின் வெறியாட்டம்!
ஆப்கானிஸ்தானில் அசாதாபாத் என்ற இடத்தில் அந்நாட்டின் 102-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில், அங்குள்ள மக்கள் மூவர்ண தேசியக் கொடியுடன் பேரணியாக சென்றுள்ளனர்.
அதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது ஆப்கானிஸ்தான் தேசியக் கொடியை அசைத்த மக்களைக் குறிவைத்து தலிபான்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
அதன் போது மக்கள் அலறியடித்து ஓடியதால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பலர் சிக்கியுள்ளனர். அந்த கூட்ட நெரிசலில் சிக்கி பொதுமக்கள் 4 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியானது.
இருப்பினும் துப்பாக்கிச் சூட்டால் உயிரிழப்பு ஏற்பட்டதா அல்லது கூட்ட நெரிசலால் உயிரிழப்பு ஏற்பட்டதா என்பது குறித்த உறுதியான தகவல்கள் இது வரை வெளியாகவில்லை.
இந்நிலையில் சர்வதேச ஊடகமான அல்ஜஸீரா, சுதந்திர தின கொண்டட்டத்தின் போது கூட்டத்திலிருந்த ஒருவர் தலிபான் போராளியை கத்தியால் குத்தி, தலிபான்களை துப்பாக்கியால் சுடத் தூண்டியதாலேயே இந்த சம்பவம் நடந்தது என சாட்சிகள் தமது ஊடகத்திற்கு தெரிவித்திருந்ததாகவும் செய்தி வெளியிட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அதிகாரத்தைக் கைப்பற்றியதன் பின்னர் நடத்தப்பட்ட முதல் துப்பாக்கிச் சூடு இது என்பது குறிப்பிடத்தக்கது.