மீண்டும் மாகாணங்களுக்கு இடையில் பயணத் தடை? அரசாங்கம் தீவிர ஆலோசனை
கொரோனா தொற்றின் அச்சுறுத்தல் மீண்டும் அதிகரித்திருப்பதால் அண்மையில் நீக்கப்பட்ட மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடுகளை திரும்பவும் நடைமுறைப்படுத்த அரசாங்கம் ஆலோசனை நடத்திவருகின்றது.
மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாட்டை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தும்படி சுகாதார அமைச்சு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
கொரோனா தொற்றின் பரவும் வீதம் அதிகரித்த காரணத்தினால் நாட்டில் மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடுகள் கடந்த மே மாதம் 20ஆம் திகதியிலிருந்து அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தன.
எனினும் தொற்றுப் பரவல் சற்று குறைந்ததை தொடர்ந்து, கடந்த 02ஆம் திகதி திங்கட் கிழமையிலிருந்து மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து தடைகள் நீக்கப்பட்டன.
இருந்த போதிலும் தற்சமயம் கொவிட் தொற்று மற்றும் திரிபுபெற்ற டெல்டா தொற்றின் பரவும் வேகம் அதிகரித்து வருகின்றது.
இந்த நிலைமையை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கத்திடம், மீண்டும் பயணக்கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்துமாறு சுகாதார அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.