ஏர் இந்தியா விமான விபத்து! வெளிநாடொன்றில் இருந்து வெளியான அறிக்கையால் பரபரப்பு
கடந்த ஆண்டு ஜூன் 12 ஆம் திகதி அகமதாபாத் நகரிலிருந்து லண்டன் நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில விநாடிகளில் கட்டுப்பாட்டை இழந்து, அருகிலிருந்த மருத்துவக் கல்லூரி விடுதி கட்டிடத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த துயரச் சம்பவத்தில் விமானத்தில் இருந்த 241 பேரும், தரையில் இருந்த 19 பேரும் என மொத்தம் 260 பேர் உயிரிழந்தனர்.
ஆரம்ப கட்ட விசாரணையில், விமானம் புறப்பட்டதும் அதன் இரண்டு இயந்திரங்களுக்கும் செல்லும் எரிபொருள் விநியோகம் திடீரென நிறுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
விமானியின் திட்டமிட்ட செயல்
விமானத்தின் தலைமை விமானி கேப்டன் சுமித் சபர்வாலும் இந்த விபத்தில் உயிரிழந்தார். எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சை விமானியே அணைத்ததால் விபத்து ஏற்பட்டதாக சில அமெரிக்க ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை மத்திய அரசு மறுத்தது. மேலும் தனது மகனின் பெயருக்கு சேதம் விளைவிக்கப்படுவதாக கூறி, கேப்டன் சபர்வாலின் 91 வயது தந்தை, சுயாதீன விசாரணை நடத்த உச்ச நீதிமன்றத்தை அணுகியதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், இத்தாலிய நாளிதழ் ஒன்றில் வெளியான செய்தி அறிக்கை புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அதில், இந்த விபத்து தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அல்ல மாறாக விமானியின் திட்டமிட்ட செயலால் ஏற்பட்டடுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையின் படி, விமானம் புறப்பட்ட 32 விநாடிகளுக்குள் எரிபொருள் சுவிட்சுகள் கையால் அணைக்கப்பட்டதாகவும், அதன் காரணமாக இயந்திரங்கள் செயலிழந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தவறுதலாக நடந்த ஒன்று அல்ல என விசாரணையில் தெரியவந்ததாகவும் அந்த செய்தி கூறுகிறது.
அறிக்கைக்கு மறுப்பு
மேலும், அமெரிக்காவின் வாஷிங்டனில் ஆய்வு செய்யப்பட்ட காக்பிட் குரல் பதிவு தரவுகளை மேற்கோள் காட்டி, கேப்டன் சபர்வாலே இயந்திரங்களை அணைத்ததாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போயிங் 787 ட்ரீம்லைனர் வகை விமானத்தின் இரண்டு இயந்திரங்களும் ஒரே நேரத்தில் இயந்திரக் கோளாறு காரணமாக செயலிழப்பது மிகவும் அபூர்வம் என அமெரிக்க நிபுணர்கள் கருத்து தெரிவித்ததாகவும் அந்த செய்தி அறிக்கை குறிப்பிடுகிறது.
இந்தநிலையில், இந்த குற்றச்சாட்டுகளை கேப்டன் சபர்வாலின் குடும்பத்தினரும் விமானிகள் சங்கங்களும் கடுமையாக மறுத்துள்ளனர்.
விமான தயாரிப்பு நிறுவனம் மற்றும் விமான சேவை நிறுவனத்தை பாதுகாக்கும் நோக்கில் உயிரிழந்த விமானிகள்மீது பழி சுமத்தப்படுவதாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |