போனஸ் கொடுப்பனவு கோரி விமான நிலைய ஊழியர்கள் போராட்டம்
2025ஆம் ஆண்டுக்கான போனஸ் கொடுப்பனவை கோரி விமான நிலைய ஊழியர் தொழிற்சங்கங்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளன.
வரையறுக்கப்பட்ட விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவர் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் ஹர்ஷ அபேவிக்ரமவினால் அறிவிக்கப்பட்ட 2025ஆம் ஆண்டுக்கான போனஸ் கொடுப்பனவாக, 05 மாத அடிப்படைச் சம்பளத்தை வழங்குமாறு வலியுறுத்தி இன்று (29) இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
இந்த போராட்டத்தில் விமான நிலைய சிறிலங்கா சுதந்திர ஊழியர் சங்கம், பொதுஜன ஊழியர் சங்கம், முற்போக்கு ஊழியர் சங்கம், தேசிய ஊழியர் சங்கம் மற்றும் சிறிலங்கன் விமான சேவையின் சிறிலங்கா சுதந்திர ஊழியர் சங்கம் ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தி சுமார் 50 ஊழியர்கள் கலந்துகொண்டனர்.
தேறிய இலாபம்
விமான நிலைய நிறுவனத்தின் வருடாந்த தேறிய இலாபம் 21 பில்லியன் ரூபாயாக உள்ள பின்னணியில், தற்போது 2025ஆம் ஆண்டுக்கான போனஸ் கொடுப்பனவாக இரண்டு மாத அடிப்படைச் சம்பளம் மாத்திரமே வழங்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா சுதந்திர ஊழியர் சங்கத்தின் தலைவர் முஹந்திரம் இதன்போது தெரிவித்தார்.

இதற்கமைய, இந்தக் கோரிக்கையைப் பரிசீலித்து குறைந்தபட்சம் மேலும் இரண்டு மாத அடிப்படைச் சம்பளத்தையாவது போனஸாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தொழிற்சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |