அரசாங்கம் காப்பாற்றவில்லை ; பிரேரணைக்கு எதிராக வாக்களித்தேன் - அலி சப்ரி ரகீம்!
"நான் இக்கட்டான சூழ்நிலையில் இருந்தபோது அரசாங்கத்தில் உள்ள எவரும் காப்பாற்றாத காரணத்தினால் தான் அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தேன்."
இவ்வாறு, புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் தெரிவித்துள்ளார்.
பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவை பதவி நீக்கம் செய்யும் பிரேரணைக்கு எதிராக வாக்களித்தமை தொடர்பில் நாடாளுமன்ற வளாகத்தில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அலி சப்ரி ரஹீம் மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார்.
நான் குற்றவாளியல்ல
நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் சட்டவிரோதமாக இலங்கைக்கு சுமார் மூன்றரை கிலோ தங்கத்தை கொண்டு வந்ததாக சுங்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு, அவருக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை செலுத்தி வெளிய வந்தார்.
பின்னர் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்த அவர் ஜனக ரத்னாயக்காவுக்கு எதிரான பிரேரணைக்கு எதிராக வாக்களித்திருந்தார்.
இந்த விடயம் தொடர்பில், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அலி சப்ரி ரஹீம்,
”பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க எனக்கு எதிராக எதனையும் செய்யவில்லை.
நான் இந்த குற்றத்தை செய்யவில்லை, எனது உதவியாளர் ஒருவரே தங்கத்தை கொண்டுவந்தார். ஆனால் நானே குற்றவாளி என முடிவெடுத்து விட்டார்கள்.
இந்த விடயத்தை நான் அதிபரின் செயலாளரிடம் கூறினேன், பிரதமரிடமும் கூறினேன், எவரும் உதவி செய்யவில்லை எனக்கு அநீதி நிகழ்த்தப்பட்டுள்ளது.
எந்த தவறும் செய்யாமல் 75 லட்சம் அபராதம் செலுத்தி வெளியே வந்தேன். எனது உதவியாளர் ஒருவரே இந்த பையை பொதி செய்து எனது பையில் வைத்துள்ளார், அவர் செய்த செயலுக்காக இறுதியில் என்னைக் கைது செய்தனர்.
எனக்கு இது போன்ற அநீதி நடந்திருக்கும் போது, எந்த உதவியும் செய்ய முன்வராத அரசாங்கத்துடன் ஏன் இருக்க வேண்டும்.
இனியும் அரசாங்கத்துடன் இருப்பதில் அர்த்தமில்லை, அதனால்தான் நான் அரசாங்கத்துக்கு எதிராக வாக்களித்தேன்." என புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் தெரிவித்துள்ளார்.