பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை பிசாசு போல காண்பிக்கும் எதிரணி
நாடு முன்னேறுவதை ஜே.வி.பியும் வேறு சில தரப்பினரும் விரும்பவில்லை. அதனாலே அவர்கள் சில பிரச்சினைகளில் தொங்கிக் கொண்டு அரசியல் செய்வதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.
நாடு முன்னேற்றமடைந்து பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டால் கடந்த 20, -25 வருடங்களாக அரசியல் செய்து வரும் அவர்களின் அரசியல் வாழ்வு நிறைவடைந்துவிடும் என்று அவர்களுக்கு தெரியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை பிசாசு போல காண்பித்து அரசியல் இலாபம் பெற எதிரணி முயற்சிக்கிறது.
துறைமுக நகரத்தினூடாக வெளிநாட்டு முதலீடுகள் அதிகளவில் கிடைக்கும். பல நாடுகள் இவ்வாறு தான் முன்னேறியுள்ளன. நாட்டின் அனைத்து சட்டங்களுக்கும் உட்பட்டதாக இந்த நகரம் செயற்படும். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு இந்த துறைமுக நகரம் பெரும் வாய்ப்பாக இருக்கும். இந்த நிலையிலே ஜே.வி.பியும் சில தரப்பினரும் இதனை எதிர்க்கின்றனர்.
சம்பிக்க ரணவக்க அமைச்சராக இருந்த போது துறைமுக நகரின் 51 வீதத்தை சீனா கம்பனிக்கும் 49 வீதத்தை அரசாங்கத்திற்கு ம் கிடைக்கும் வகையில் யோசனை முன்வைத்தார்.
இன்று அவரது கட்சி துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டத்தை எதிர்ப்பது நகைப்பிற்குரியதாகும் என்றார்.