அனைத்து தமிழ் கட்சிகளும் இணைந்து இந்திய பிரதமருக்கு கடிதம் - தமிழ் தேசிய கூட்டணி
அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் இந்தியாவுக்கான விஜயத்திற்கு முன்னதாக தமிழர் பிரச்சனையை தீர்க்க அழுத்தம் கொடுக்கவேண்டி தமிழ் கட்சிகள் இந்திய பிரதமருக்கு கடிதம் அனுப்பவேண்டும் என தமிழ் தேசிய கூட்டணியின் நிறைவேற்று குழுவில் தீர்மானம் எட்டப்பட்டதாக வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
பத்மநாபாவின் 33 ஆவது நினைவுதினம் இன்று வவுனியா நகர மத்தியில் உள்ள அவரது சிலையடியில் இடம்பெற்றதன் பின்னர் ஈ.பி.ஆர்.எல்.எப் இன் வவுனியா அலுவலகத்தில் நடைபெற்ற அஞ்சலி உரையின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்தியாவை நாடி
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
"யுத்தம் முடிந்து 14 ஆண்டுகளில் தமிழ் மக்கள் தீர்வொன்றினையோ அல்லது போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான ஏனைய பிரச்சனைகளோ தீர்க்கமுடியாத நிலையிலேயே காணப்படுகிறது.
இதற்கு அப்பால் ஒரு சில கட்சிகளை தவிர ஏனைய தமிழ் தேசிய கட்சிகள் மீண்டும் இந்தியாவை நாடி இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தியா இல்லாமல் இந்த பிரச்சனையை தீர்க்க முடியாது என கூறியே நாடியிருக்கின்றது.
இந்திய பிரதமர் ஈழத்தமிழர்களின் பிரச்சனையை தீர்க்க இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்ற நிலைப்பாடு ஏற்பட்டுள்ளது.
தீர்மானம்
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிர்வாகம் நேற்று கூடியபோது முக்கியமாக ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதாவது, 21 ஆம் திகதி இலங்கை அதிபர் இந்திய பிரதமரை சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பில் ஈழத்தமிழர்களின் பிரச்சனைக்கு நிரந்தரமான அரசியல் தீர்வை காண வேண்டும்.
அதற்கு அப்பால் இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் உள்ள 13 ஆவது திருத்த சட்டத்தின் பிரகாரம் மாகாண சபைக்குள்ள முழுமையான அதிகாரங்கள் வழங்கப்படவேண்டும்.
போரின் பின்னர் ஏற்பட்ட பல்வேறு பிரச்சனைகளான நில ஆக்கிரமிப்பு, பெளத்த மயமாக்கல் போன்ற பல பிரச்சனைகளுக்கு இந்திய பிரதமர் இலங்கை அதிபருக்கு அழுத்தத்தை பிரயோகித்து பிரச்சனைகளை தீர்க்க வேண்டும்.
தமிழ் தேசிய கூட்டமைப்பும், ஏனைய தமிழ் தேசிய பரப்பில் உள்ள கட்சிகளும் இணைந்து குறித்த சந்திப்புக்கு முன்னதாக இந்திய பிரதமருக்கு ஒரு கடிதத்தை கையெழுத்திட்டு அனுப்பவேண்டும் என்ற தீர்மானம் எட்டப்பட்டுள்ளது." எனத் தெரிவித்துள்ளார்.
