மாற்றுவலுவுடையோர் சமூகத்தில் புறக்கணிக்கப்படுவதாகச் சுட்டிக்காட்டு - 12 அம்சக் கோரிக்கைகளும் முன்வைப்பு
மாற்று வலுவுடையோர் சமூகத்தாலும், குடும்பங்களாலும் புறக்கணிக்கப்பட்டு வருவதாக அமரா குடும்பத் தலைமைதாங்கும் பெண்கள் ஒன்றியம் மற்றும் மாதர்கிராம அபிவிருத்தி சங்கங்களின் ஒன்றியம் என்பன சுட்டிக்காட்டியுள்ளன.
அத்தோடு மாற்று வலுவுடையோரின் நலனினை நோக்காகக் கொண்டு பன்னிரண்டு அம்சக் கோரிக்கைகளும் அவர்களால் முன்வைக்கப்பட்டுள்ளன.
முல்லைத்தீவு மாவட்ட அமரா குடும்பத் தலைமை தாங்கும் பெண்கள் ஒன்றியம் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்களின் ஒன்றியம் ஆகியன இணைந்து கடந்த 25 ஆம் திகதி முல்லைத்தீவு ஊடக அமையத்தில் ஊடகசந்திப்பொன்றை நடாத்தியிருந்தனர்.
குறித்த ஊடகசந்திப்பிலேயே அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் குறித்த அமைப்பைச் சாரந்தவர்கள் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
கடந்த ஒரு தசாப்த காலமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளின் எண்ணிக்கை அதிகமாகவே இருந்து வருகின்றது. போரினால் மாற்றுத்திறனாளிகளாக ஆக்கப்பட்டோரின் தொகை அதிகமாகவும் இயற்கையாகவும் எதிர்பாராத விபத்துக்களால் மாற்றுத்திறனாளிகளாக மாற்றப்பட்டோரின் எண்ணிக்கை கணிசமாகவும் இங்கு காணப்படுகின்றது.
உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்கள் 2664 என்ற குறைவான தொகையினைக் காட்டினாலும் போரினால் மாற்றுத்திறனாளிகளாக ஆக்கப்பட்ட அதிகளவான மாற்றுத்திறனாளிகள் என இருமடங்கு அளவில் அவர்களது எண்ணிக்கை காணப்படுகின்றது.
மாற்றுத்திறனாளிகளாக அடையாளப்படுத்தப்படுவோர் வேறுபட்ட திறன்கள், ஆற்றல்கள் மற்றும் ஆளுமைகள் உடையோராகக் காணப்படுகின்றனர். அவர்களது உரிய திறமைகள் அடையாளம் காணப்பட்டு அவை மெருகூட்டப்படும்போது அல்லது வலுப்படுத்தப்படும்போது, அத்தகைய மாற்றுத்திறனாளிகள் சாதனையாளர்களாகவும், வெற்றியாளர்களாகவும், ஆளுமையுள்ளவர்களாவும் சமூகத்தில் தங்களை நிலைநிறுத்திக் கொள்வர் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்துமில்லை.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக எங்களது மாவட்டத்தில் அவர்களை நலிவுற்றவர்களாகவே இன்றுவரை சமூகம் அடையாளப்படுத்திச் சுட்டிக் காட்டுகின்றது. அவர்கள் அவர்களது குடும்பத்தினராலும் சமூகத்தினாலும் புறக்கணிக்கப்படுகின்றபோது, அவர்களின் அடிப்படை சுதந்திரம் மதிக்கப்படாதபோது அவர்களுக்குள் உறைந்து கிடக்கும் ஆளுமைகளை வெளிப்படுத்த முடியாத சூழல் ஏற்படுகின்றது. இதனால் அவர்கள் குடும்பத்திலிருந்து ஒதுங்கி வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டு ஏனையோரிலிருந்து அந்நியப்படுத்தப்படுகின்றனர்.
இத்தகைய மாற்றுத் திறனாளிகளின் நலன்கள் மற்றும் அவர்களது உரிமைகள் தொடர்பிலும் மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காகவும் அவர்கள் மீதான அக்கறை மற்றும் மனிதாபிமானத்தினைப் பேணுவதனையும் நோக்காகக் கொண்டே ஐ.நாவினால் டிசம்பர் மூன்றாம் திகதி சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் பிரகடனப்படுத்தப்பட்டு ஒவ்வொரு வருடமும் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
எங்களது மாவட்டத்தினைப் பொறுத்தவரையில் மாற்றுத்திறனாளிகள் பொருளாதார ரீதியில் மிகவும் பலவீனமான நிலைமையிலேயே வாழ்ந்து வருகின்றனர். விழுது நிறுவனத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் மற்றும் பங்குதாரர்களுடனான கலந்துரையாடல்கள் அதனை நிரூபித்து நிற்கின்றன.
உலக சுகாதார அமைப்பின் தரவுகளின் அடிப்படையில் உலகின் மொத்த சனத்தொகையில் 15 சதவீதம் மக்கள் மாற்றுத்திறனாளிகளாகக் குறிப்பிடப்படுகின்றனர். அதிலும், 80 சத வீதமானோர் இலங்கை போன்ற குறைந்த நடுத்தர வருமானம் பெறும் நாடுகளிலேயே உள்ளனர்.
இலங்கையைப் பொறுத்தவரையில் இங்கு நடைபெற்ற நீண்டகால யுத்தத்திற்குப் பின்னர் சமூக பொருளாதாரக் காரணிகளில் பல பின்னடைவுகளை எதிர்நோக்கியுள்ள நாடாகக் காணப்படுகின்றது. அதன் பிரதிபலிப்புக்கள் இன்னும் தொடரும் நிலையில் அதிகமான மாற்றுத்திறனாளிகள் உருவாகி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. இலங்கையின் சனத்தொகையில் 22 சதவீதமான மக்கள் மாற்றுத்திறனாளிகளாக உள்ளதாகச் சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது. 2041 ஆம் ஆண்டில் இது 24.8 சதவீதமாகக் காணப்படுமென சுகாதார அமைச்சின் தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகளின் தேவைகளைக் கருணை அடிப்படையில் பார்ப்பதனை விடுத்து அவர்களது உரிமைகளின் அடிப்படையில் நோக்கவேண்டும் என்பது எழுதப்படாத விதி. ஆனாலும் ஐக்கிய நாடுகள் சபையின் சாசனவிதிகள் எழுத்துருவில் தான் இன்னமும் உறங்கிக் கொண்டிருக்கின்றதே தவிர, அவற்றுக்கு உலகநாடுகளில் செயற்படுவடிவங் கொடுக்க ஐ.நா கொடுக்கும் அழுத்தம் மிக இழிவான நிலையிலேயே இன்றுவரை காணப்படுகின்றது. அதே நிலைமை தான் எங்களது இலங்கையிலும்.
வடக்கு கிழக்கில் மட்டும் சுமார் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் அல்லது அவர்களுக்குச் சமமானவர்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்களில் பெரும்பாலோனோர் போரின்போது வெளிப்படையாக அவயங்களினை இழக்காத ஆனால் உடலளவில் மாற்றுத்திறனாளிகள் போன்று உடற் பலமிழந்த அவயங்கள் பாதிப்புற்ற பல ஷெல் குண்டுகளின் சிதறல்களை உடலினுள் சுமந்து வாழ்கின்றனர். அவர்களால் ஒரு பொருளினைத் தூக்குவதோ அல்லது தொழில் முயற்சிகளில் ஈடுபடுவதோ இயலாத காரியம்.
இந்த நிலையில் அவர்கள் குடும்பத்தினைத் தலைமை தாங்கிக் கொண்டு இருந்தால் அக் குடும்பத்தின் வாழ்வாதாரம் மற்றும் வருமானம் ஈட்டல் என்பது மிகவும் சவாலானதாகவே இருக்கும். குழந்தைகளது கல்வி மற்றும் வயது முதிர்ந்த பெற்றோர் மீதான பராமரிப்பு என அக்குடும்பம் தள்ளாடியபடியே தான் இருக்கும்.
மாற்றுத்திறனாளிகள் ஒப்பீட்டளவில் குறைவான ஆரோக்கியம், குறைவான கல்வி மட்டம் மற்றும் குறைவான வருமானம் பெறும் நிலைமையே இங்கு காணப்படுகின்றது. அவர்களுக்குக் கிடைக்கும் வாய்ப்புக்கள் மற்றும் சேவைகள், வாழ்வாதார சலுகைகள் மற்றும் தொழில் வாய்ப்புக்கள் ஒப்பீட்டளவில் மிகவும் குறைந்த அளவில் காணப்படுவதே அவர்களின் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கின்றது.
மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு 3 சதவீதமாக அரசினால் ஒதுக்கப்பட்டுள்ள போதிலும் அது அவர்களுக்கு முழுமையாகக் கிடைக்கின்றதா என்று அதனை இதுவரை எவருமே மதிப்பீடு செய்து பார்த்ததில்லை. ஏனெனில் அவர்களை மனிதராகவே பார்க்க இந்தச் சமூகம் விரும்புவதில்லை போலும்.
உலக நாடுகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான பொருத்தமான பல வாழ்வாதார திட்டங்கள் மற்றும் தொழில் முயற்சிகள் என இருக்கின்றபோதிலும் நம் நாட்டைப் பொறுத்தவரையில் இதுவரையில் இலங்கை அரசினால் மாற்றுதிறனாளிகளுக்கென ஒரு வாழ்வாதாரத்திட்டம் கூட நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றே கூறலாம். இது அரசாங்கம் கூட சமூக உள்வாங்கலினை நடைமுறைப்படுத்தாத பாரபட்ச நிலைமையே என்பதில் தவறில்லை.
மாற்றுத்திறனாளிகள் மீது அரசாங்கம் காட்டும் மாற்றாந்தாய் மனப்பான்மை மாறாதவரை அவர்களது வாழ்வில் மாற்றம் வருவதென்பது எட்டாக்கனியாகவே இருக்கப் போகின்றது.
இன்னும் மாற்றுத்திறனாளிப் பெண்களுக்கென தனியான கொள்கைகள் எவையும் இதுவரை உருவாக்கப்படவில்லை. இத்தகைய நிலைமைகளையெல்லாம் அவதானித்தே முல்லைத்தீவு மாவட்ட அமரா குடும்பத் தலைமை தாங்கும் ஒன்றிய அங்கத்தவர்களாகிய நாம் எங்களது மாற்றுத்திறனாளிகள் அனைவரதும் வாழ்வாதார உரிமைகளுக்காகவும் ஏனைய தேவைகளுக்காகவும் இங்கு குரலெழுப்ப ஒன்றிணைந்துள்ளோம். குறிப்பாக அவர்களது வாழ்வாதார உரிமைகள், சமூக, பொருளாதார அரசியற் பண்பாட்டு உரிமைகள் பற்றிய எங்களது கருத்துக்களையும் சிபாரிசுகளையும் முன்வைக்க விரும்புகின்றோம்.
மாற்றுத்திறனாளிகளுக்கான வாழ்வாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு உணவினையோ அல்லது உலருணவுப் பொதிகளையோ வழங்கினால் மாத்திரம் அவர்களது தேவைகள் தீர்ந்துவிடும் என்பது பலரது எண்ணக்கருவாக உள்ளது. இதனால் அவர்களின் நாளாந்த உணவு தேவை பூர்த்தியாகின்றதே தவிர அவர்களின் பொருளாதாரம் அதிகரிப்பதில்லை. இதனால் ஏனைய தேவைகள் பூர்த்திசெய்யப்படுவதும் இல்லை. அவர்களது பொருளாதார நிலைமை மிகவும் மோசமாகவே உள்ளது. இதனை மாற்ற அவர்களுக்குப் பொருத்தமான உதவிகள் திட்டங்களினை அவர்களுக்கு அரசாங்கம் வழங்கி அவர்களது வாழ்விலே மாற்றம் ஏற்பட உதவிட வேண்டும்.
மாற்றுத்திறனாளிகள் வாழ்கின்ற சூழலில் இடத்திற்கு இடம் நகர்வதற்கு விசேடமான நடமாட உதவும் கருவிகள் போதியளவில் காணப்படாத நிலைமையில் அவர்கள் தமது வாழ்வாதாரத்தினைக் கொண்டு நடாத்த உற்பத்தி செய்யும் பொருட்களினைக் கூட சந்தைப்படுத்த முடியாத நிலைமை காணப்படுகின்றது. மாற்றுத்திறனாளிகளின் சமூகத் தொடர்புகள் இதனால் தடைப்படுகின்றன. சில வேளைகளில் மாற்றுத்திறனாளிகள் அவர்களுக்குத் தேவையான உதவி சாதனங்களைக் கொண்டிருக்கின்ற போதிலும் அவர்கள் வாழும் சூழலினது அமைப்பு முறையிற் பல தடைகள் காணப்படுகின்றன.
பொதுவாக சுற்றுச்சூழல் கட்டமைப்புக்கள் மாற்றுத்திறனுடன் கூடிய மக்களைக் கருத்தில் கொண்டு வடிவமைக்கப்படாத தன்மை காணப்படுகின்றது. உதாரணமாக மலசலகூடங்கள், சாய்தளங்கள், பேருந்துகள் மற்றும் வங்கிகள் போன்றவற்றினைக் குறிப்பிடலாம். எனவே பொது இடங்கள் நிறுவனங்களில் இத்தகைய வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டியது முக்கியமானதாகும். மாற்றுதிறனாளிகளின் உற்பத்திகளைச் சந்தைப்படுத்துவதற்கான வாய்ப்புக்களை அரசு உருவாக்கிக் கொடுக்க வேண்டும்.
அத்துடன் சில மாற்றுத்திறனாளிகளுக்கு மற்றொருவரது உதவி தேவைப்படுகின்றது. குறிப்பாக இயற்கை உபாதைகளைத் தீர்ப்பது உட்பட பல்வேறு தேவைகளுக்கும் வேறொரு நபரின் உதவி தேவைப்படுகின்றது. இதனைக் கருத்திற்கொண்டு அவர்களது நிலைமை சார்ந்து ஆற்றக்கூடிய சுய தொழில்வாய்ப்புக்கள் மற்றும் வாழ்வாதாரத் திட்டங்கள் வடிவமைப்பதுடன் அவை பால்நிலைக் கண்ணோட்டத்துடன் அமைதல் வேண்டும்.
ஒவ்வொரு தனி மனிதனும் சமூகத்தின் உறுப்பினர் என்ற ரீதியிலே சமூக பாதுகாப்பிற்கான உரிமையினை உடையவர். மேலும் ஒவ்வொருவரும் அவருடைய கௌரவம் மற்றும் ஆளுமையின் விருத்திக்குத் தேவையான பொருளாதார, சமூக மற்றும் கலாசார உரிமைகளுக்கு உரித்துடையவராவார். இலங்கை அரசியலமைப்பின் அத்தியாயம் 12(1), 12(2), 12(4) ஆகிய உறுப்புரைகள் ஊடாக அனைவரும் சமமாக மதிக்கப்படுவதன் முக்கியத்துவம் சொல்லப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் பாதுகாப்புச்சட்டத்தின் மூலம் இலங்கையில் வலுவிழந்தோருக்கான தேசிய சபை உருவாக்கப்பட்டதாயினும், இலங்கையில் மாற்றுத்திறனாளிகளின் பாதுகாப்புக்காக முன்வைக்கப்பட்டுள்ள சட்டமுறைகள் மற்றும் கொள்கை வரைபுகள் போதுமானதா என்பது விவாதிக்கக்கூடிய ஒரு விடயமாகவே உள்ளது. சட்டங்களும், கொள்கைகளும் மிகவும் குறைவாகவே காணப்பட்டாலும் அவற்றைக் கூட நடைமுறைப்படுத்தாத அவலநிலையே இலங்கையில் உள்ளது.
எனவே இலங்கையில் சட்டங்களிலும் கொள்கைகளிலும் சமூக உள்வாங்கலினைக் கருத்திற் கொண்டு, சில மாற்றங்களைக் கொண்டுவர முல்லைத்தீவு மாவட்ட அமரா சமாச ஒன்றியத்தினராகிய நாம் பின்வரும் சிபார்சுகளினை கொள்கை வகுப்பாளர்களுக்கும் தொடர்புடையோருக்கும் முன்வைக்கின்றோம்.
- மாற்றுத்திறனாளிகளுக்கான ஒரு தனியான ஆணைக்குழு உருவாக்கப்பட்டு அவர்களின் உரிமைகள் முன்னுரிமைப்படுத்தப்பட வேண்டும். அவர்களுக்கான புதிய கொள்கைகள் நடைமுறைக்கேற்ப வரையப்படவேண்டும். அவை சட்டங்களாக உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படவேண்டும்.
- பெண் மாற்றுத்திறனாளிகளின் தேவைகள் முன்னுரிமைப்படுத்தப்பட்டு அவை அணுகப்படவேண்டும்.
- இன்று உலகம் கவனம் செலுத்தும் முக்கியமானதோர் விடயம் சமூகத்தில் வாழும் அனைவருக்கும் எதுவித வேறுபாடும் இல்லாமல் அனைவரும் சமமாக மதிக்கப்படுவதுடன் அவர்களுக்கான மாண்பினையும் வழங்குவதாகும். மாற்றுத்திறனாளி நபர்களும் சமூகத்தில் சமமான உரிமைகளை அனுபவிக்க உரிமையுடையோர்கள் என அடையாளப்படுத்த வேண்டும்.
- அரசினது கல்வி தொழில்வாய்ப்பு, அரசியல் போன்றவற்றில் இட ஒதுக்கீட்டினை அதிகரித்து ஊக்குவிப்பு வழங்குவதுடன் அவர்களுக்கான சலுகைகளும் வழங்கப்பட வேண்டும்.
- மாற்றுத்திறனாளிகளுக்குப் பொருத்தமான தொழிற் பயிற்சிகளையும் வளங்களையும் வழங்கல்.
- அரைமானிய வாழ்வாதாரத் திட்டங்களினை விடுத்து மாற்றுதிறனாளிகள் தாமாகவே பொருளாதாரத்தை மேம்படுத்திக் கொள்ளக்கூடிய வகையில் வாழ்வாதாரத் திட்டங்களை வழங்கல்.
- சுற்றுச்சூழல் மற்றும் நிறுவனக் கட்டமைப்புக்கள் மாற்றுத்திறனுடன் கூடிய மக்களைக் கருத்திற் கொண்டு வடிவமைக்கப்பட வேண்டும்.
- மாற்றுதிறனுடையவர்கள் இலகுவாக சேவைகளை அணுகக்கூடியவாறான வசதிகள் மற்றும் முன்னுரிமைப்படுத்தல்களினை ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும்.
- மாற்றுதிறனாளிக் குடும்பங்களுக்கு வாழ்வாதாரம் உதவிகளினை வழங்குவதனை விடுத்து மாற்றுத்திறன் உடையவர்களுக்குத் தகுந்த வாழ்வாதாரத் திட்டங்களை வழங்க வேண்டும்.
- அவர்கள் அரசியலில் போட்டியிடவும் சமூக மட்ட அமைப்புக்களில் தீர்மானமெடுக்கும் பதவிகளில் போட்டியிடவும் இடம் அளிக்கப்பட வேண்டும்.
- அவர்களது சுகாதாரத் தேவைகள் கவனத்திற்கு உட்படுத்தப்படுவதுடன் அவர்களுக்கான பிரத்தியேகத் தன்மை கருதி உரிய மருத்துவப் பொதிகள் வழங்குவதற்குரிய ஒதுக்கீட்டினை அரசாங்கம் உள்ராட்சி மன்றங்கள் மூலமாக ஏற்பாடுகளினைச் செய்து தரல் வேண்டும். (மாதவிடாய் துவாய்கள், பம்பர்ஸ், கலீற்றர் மற்றும் பிற)
போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.