மீண்டும் ஈரானைத் தாக்கிய அமெரிக்கா! மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பதற்றம்
ஹோர்முஸ் நீரிணை மீது பறந்துகொண்டிருந்த இராணுவ உலங்கு வானுர்தி ஒன்றை ஈரான் சுட்டு வீழ்த்தியதற்கான பதிலடி தாக்குதலை அமெரிக்கா இராணுவம் தொடங்கியுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப் குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து அமெரிக்க ஆயுதப் படைகள் ஈரானைக் குறிவைத்து ஒரு பெரும் தொடர் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளன.
தொடர் தாக்குதல்களை உறுதிப்படுத்திய அமெரிக்க மத்திய கட்டளை மையம், வெளியிட்ட அறிக்கையில், "ஈரானின் நியாயமற்ற ஆக்கிரமிப்புச் செயலுக்கு இது ஒரு தகுந்த பதிலடியாகும்" என்று கூறியுள்ளது.
ஹோர்முஸ் நீரிணை பதற்றம்
பாரசீக வளைகுடாக் கடற்கரை மற்றும் ஹோர்முஸ் நீரிணையில் இருந்து பலத்த வெடிச்சத்தங்கள் கேட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. விபத்துக்குள்ளான அமெரிக்க அப்பாச்சி உலங்குவானுர்திகளில் இரண்டு பணியாளர்கள், அமெரிக்க கடற்படை ட்ரோன் மூலம் மீட்கப்பட்டுள்ளனர்.

இதுபோன்ற ஒரு பணிக்கு ஆளில்லா கடல் வாகனத்தைப் பயன்படுத்தியதை அமெரிக்க இராணுவம் பகிரங்கமாக உறுதிப்படுத்தியுள்ளது இதுவே முதல் முறையாகும்.
“விமானத்தில் இரண்டு விமானிகள் இருந்தனர், அவர்கள் இருவரும் தற்போது பாதுகாப்பாகவும் காயமின்றியும் உள்ளனர். இருப்பினும், இந்தத் தாக்குதலுக்கு அமெரிக்கா பதிலடி கொடுக்க வேண்டும்," என்று ஜனாதிபதி தனது 'ட்ரூத் சோஷியல்' கணக்கில் பதிவிட்டுள்ளார்.
தாக்குதலை நடத்துவதற்கு ஈரான் ஒரு ட்ரோனைப் பயன்படுத்தியதாக அமெரிக்க அதிகாரிகள் கூறியதாகவும், ஆனால் அது வேண்டுமென்றே உலங்கு வானூர்திகளை குறிவைத்துத் தாக்கப்பட்டதா என்பது தெளிவாகத் தெரியவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில், உலங்கு வானூர்தியை சுட்டு வீழ்த்தியதற்கு ஈரான் பொறுப்பேற்கவில்லை என்று ஈரானின் பகுதி அரசு செய்தி நிறுவனமான மெஹர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அப்பாஸ் அராக்சி எச்சரிக்கை
அமெரிக்க செய்தி இணையதளமான ஆக்சியோஸின்படி, இந்தத் தொடர் தாக்குதல்கள் முக்கியமாக ஈரானிய பாதுகாப்பு மற்றும் ரேடார் அமைப்புகளைக் குறிவைத்து நடத்தப்பட்டன.

பந்தர் அப்பாஸ், கெஷ்ம் மற்றும் சிரிகி உள்ளிட்ட பாரசீக வளைகுடாக் கடற்கரைப் பகுதிகளில் வெடிச்சத்தங்கள் கேட்டதாக ஈரானிய அரசு ஊடகங்களும் உறுதிப்படுத்தியுள்ளன.
இந்நிலையில் அமெரிக்கத் தாக்குதல்களுக்குப் பதிலளிக்கும் விதமாக, ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
"எந்தவொரு தாக்குதலையும் அல்லது அச்சுறுத்தலையும் நாங்கள் பதிலடி கொடுக்காமல் விடமாட்டோம்" என்று அவர் கூறினார்.
மேலும் அவர், "போர்க்களத்தில் தோற்கடிக்கப்பட்ட போதிலும், அமெரிக்கா எங்கள் உறுதியைச் சோதிக்க முடிவு செய்துள்ளது. நீங்கள் பாதுகாப்பாக இருக்க விரும்பினால், எங்கள் பிராந்தியத்தை விட்டு வெளியேறுங்கள்," என்று X சமூக ஊடக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
செவ்வாயன்று இஸ்ரேலியப் படைகள் தெற்கு லெபனான் மீது தாக்குதல்களைத் தொடுத்தபோது இந்த இராணுவச் சூழல் உருவானது.
இஸ்ரேலியத் தாக்குதல்
தெற்கு லெபனான் மீதான இஸ்ரேலியத் தாக்குதல்கள், அப்பகுதியில் மற்றொரு தொடர் எதிர்த்தாக்குதல்களைத் தூண்டக்கூடும் என்று தெஹ்ரான் முன்னதாகவே எச்சரித்திருந்தது. மேலும், அமெரிக்காவுடனான அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கான ஈரானின் தலைமைத் தூதர் முகமது பாகர் காலிபாஃப், சமூக வலைதளத்தில்,
"எங்களுக்கு ராஜதந்திர மொழி பிடிக்கும், ஆனால் நாங்கள் மற்ற மொழிகளில் அதிக சரளமாகப் பேசக்கூடியவர்கள். நீங்கள் உங்கள் வாக்குறுதிகளை மீறினால், நாங்கள் மிகவும் திறமையான மொழிக்கு மாறுவோம்" என்று கூறியுள்ளார்.
வார இறுதியில் நடந்த துப்பாக்கிச் சூடுகளுக்குப் பிறகு, ஏப்ரல் மாதம் போர் நிறுத்தம் எட்டப்பட்டதிலிருந்து இஸ்ரேலும் ஈரானும் பரஸ்பரத் தாக்குதல்களைத் தற்காலிகமாக நிறுத்தி வருகின்றன.
பிராந்தியப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக வாஷிங்டனுக்கும் தெஹ்ரானுக்கும் இடையே நடைபெறும் பேச்சுவார்த்தைகளுக்கு இந்தத் தாக்குதல்கள் தடையாக இருப்பதால், இரு தரப்பினரும் உடனடியாகத் தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என்று ட்ரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்.
இருப்பினும், செவ்வாயன்று செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், பிராந்திய அமைதிக்கான மிக நல்ல உடன்படிக்கையை எட்டும் இறுதிக் கட்டத்தில் இருப்பதாகவும், இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் ஹோர்முஸ் நீரிணை உடனடியாகத் திறக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
மண்டைதீவு படுகொலை … கடலால் சூழப்பட்ட ஒரு தீவின் இரத்த நினைவுகள்... 10 மணி நேரம் முன்