"பிலவ" வருடப்பிறப்பு தடைகளைத் தகர்த்து நாட்டு மக்கள் அனைவருக்கும் புது விடியலைத் தருவதாக அமையட்டும்!
"பிலவ" வருடப்பிறப்பு தடைகளைத் தகர்த்து நாட்டு மக்கள் அனைவருக்கும் புது விடியலைத் தருவதாக அமைய வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினரும், யாழ் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான அங்கஜன் இராமநாதன் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்-சிங்கள புதுவருட வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். மேலும் அவர் தனது வாழ்த்துச் செய்தியில், எந்த மாதத்திற்கும் இல்லாத தனிச்சிறப்பு சித்திரை மாதத்திற்கு உண்டு. தனிச்சிறப்பு மிக்க இம்மாதத்தில் தடைகள் அனைத்தையும் தகர்த்தெறிந்து புது விடியலுக்கான பயணத்தை ஆரம்பிப்போம்.
தடுப்புச் சுவர்களை உடைத்தெறிந்து அபிவிருத்தியில் புது மைல்கல்லை எட்டுவோம் எனவும் நம்புகிறேன். பிலவ வருஷத்தில் நாட்டு மக்கள் ஒவ்வொருவர் வாழ்விலும் புது விடியல் உண்டாக வேண்டும். சவால்கள் அனைத்தையும் முறியடித்து அபிவிருத்தியை முன்னெடுத்து அதனூடாக நாட்டு மக்களின் வாழ்வில் ஒளியேற்ற பிலவ வருடம் உறுதுணையாக இருக்கும் என நம்புகிறேன்.
அத்துடன் கொரோனா எனும் கொடிய நோய்த் தொற்றில் இருந்து நாட்டைக் காப்பாற்றவும் நாட்டு மக்கள் அனைவரும் இச் சந்தர்ப்பத்தில் திடசங்கற்பம் பூண வேண்டும். நாட்டு மக்கள் சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றி தமிழ்-சிங்கள சித்திரைப் புத்தாண்டின் மகிமையை முழுமையாக அனுபவித்திட வேண்டும்.
பிறக்கின்ற புத்தாண்டு நாட்டு மக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியையும், சுபீட்சத்தையும், நோய் நொடியற்ற புது வாழ்வையும் தருவதாக அமைய வேண்டும். என மேலும் தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டிருந்தார்.
