முன்னாள் அரச தலைவர் வெளியிட்ட அறிவிப்பு
இந்த நாட்டின் அரசியல்வாதிகள் மத்தியில் நேர்மையான, ஊழலற்ற, மோசடியற்ற, தேசப்பற்றுள்ளவர்களை ஒன்றிணைத்து பரந்த பலமான சக்தியொன்று உருவாக்கப்பட வேண்டுமென முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அந்த சக்தியினூடாக நாட்டின் எதிர்காலத்தை மேம்படுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி, உரம், எரிவாயு மற்றும் பொருட்களின் விலைகள் தொடர்பில் ஒருவரையொருவர் சுட்டிக் காட்டாமல் அரசாங்கம் தனது பொறுப்பை நிறைவேற்ற வேண்டும் என முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று (8) நடைபெற்ற ரணவிரு பிரதிபா பிரணாம விருது வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அனைத்து நாடுகளின் கூட்டமைப்பினால் 28வது முறையாக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாட்டின் விவசாயிகள் உரம் இன்றி மிகவும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்த முன்னாள் அரச தலைவர், எங்கும் காஸ் சிலிண்டர்கள் வெடித்துச் சிதறியதால் மக்களும் பாதிக்கப்படுவதாகத் தெரிவித்தார்.
தற்போதுள்ள பிரதான பிரச்சினைகளுக்கு தீர்வுகாணப்பட்டு, நாட்டில் துன்பப்படும் மக்களுக்கான பொறுப்பை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் எனவும், இது தொடர்பில் அரசாங்கத்திற்கு தேவையான ஆதரவை வழங்குவதற்கு தமது கட்சி நடவடிக்கை எடுக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.