பேராசிரியர் விக்னேஸ்வரனின் இறுதிநிகழ்வு தினம் அறிவிப்பு
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கணிதத்துறைப் பேராசிரியரும், முன்னாள் துணைவேந்தருமான பேராசிரியர் இரட்ணம் விக்னேஸ்வரன் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் 21 ஆம் திகதி, செவ்வாய்க் கிழமை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கோண்டாவில் வடக்கிலுள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது பூதவுடல் செவ்வாய்க்கிழமை காலை 7:30 மணிக்கு அங்கிருந்து எடுத்துச் செல்லப்பட்டு, பல்கலைக்கழகத்தில் அஞ்சலிக்கு வைக்கப்படவுள்ளது.
யாழ். பல்கலையில் அஞ்சலி

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கத்தில் நடைபெறவுள்ள அஞ்சலி நிகழ்வைத் தொடர்ந்து, முற்பகல் 9:30 மணிக்கு பூதவுடல் மீண்டும் அவரது இல்லத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்கு முற்பகல் 10:30 மணிக்கு இறுதிக் கிரியைகள் நடாத்தப்பட்ட பின்னர் தகனக் கிரியைகளுக்காக இணுவில் கிழக்கு, காரைக்கால் இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
துணைவேந்தராகக் கடமையாற்றிய காலத்தில் பேராசிரியர் விக்கினேஸ்வரன் 'தமிழமுதம்' என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டமைக்காகவும், பல்கலைக் கழகத்தினுள் நினைவுத் தூபி அமைக்கப்படுவதை தடுக்கத் தவறியமை தொடர்பிலும் பதவியில் இருந்து நீக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.