கடன் வாங்க வேண்டிய நிலையில் அநுர அரசாங்கம் : பொருளியல் பேராசிரியர் பகிரங்கம்
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பாதீட்டுப் பற்றாக்குறையை படிப்படியாகக் குறைத்தாலும், கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கொழும்புப் பல்கலைக்கழகத்தின் பொருளியல் ஆய்வுப் பிரிவின் பேராசிரியர் பிரியங்க துனுசிங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் கடந்த ஆண்டில் அரசாங்கம் அதிக கடன் வாங்கியதாக வெளியாகும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த அரசாங்கம் கடன்களைப் பெறுவது பெரும்பாலும் உள்நாட்டு மூலங்களிலிருந்தே ஆகும்.
வரவுசெலவுத் திட்டப் பற்றாக்குறை
இதற்குக் காரணம், கடன் நெருக்கடியால் வெளிநாட்டு நிதிச் சந்தைகளுக்கோ அல்லது இருதரப்புக் கடன் வழங்குநர்களிடமிருந்தோ கடன்களைப் பெறும் திறன் மிகக் குறைந்த மட்டத்தில் உள்ளது.

பலதரப்பு நிறுவனங்கள் கூட முன்பைவிட குறைந்த சலுகை வட்டிக் கடன்களையே இப்போது வழங்குகின்றன. வரவுசெலவுத் திட்டப் பற்றாக்குறை நிலவும் நிலையில், அரசாங்கம் கட்டாயம் கடன் வாங்க வேண்டியுள்ளது.
இந்த அரசாங்கத்தின் கீழ் அதிக கடன் வாங்கியதாக நான் காணவில்லை. ஏனெனில், பாதீட்டுப் பற்றாக்குறை படிப்படியாகக் குறைந்து வருகிறது. அதேபோல், 2026 ஆம் ஆண்டுக்கான அரசாங்கத்தின் கடன் இலக்குகளைப் பார்க்கும்போது, கடன்களைக் குறைப்பதையே அது காட்டுகிறது.
எனவே, குறுகிய காலப்பகுதியில் அதிக கடன் வாங்கிய அரசாங்கம் இது என்று ஒரு அறிக்கைக்குத் தேவையான ஆதாரங்களை எங்களால் வழங்க முடியும் என்று நான் நம்பவில்லை“ என தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |