சட்டமா அதிபரை பதவி விலகுமாறு அநுர அரசு அழுத்தம் : தயாசிறி ஜயசேகர குற்றச்சாட்டு
ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் (Lasantha Wickramatunga) கொலை தொடர்பில் சட்டமா அதிபர் மீது அழுத்தம் பிரயோகித்து அவரை பதவி விலகச் செய்வதே தற்போதைய அரசாங்கத்தின் சூழ்ச்சி என நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர (Dayasiri Jayasekara) குற்றஞ்சாட்டியுள்ளார்.
அத்துடன் சட்டத்துறையில் அரசியல் தலையீடு செலுத்தாமல் விசாரணைகளை சுயாதீனமாக முன்னெடுப்பதற்கு குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு (CID) இடமளிக்க வேண்டும் என்று அவர் மேலும் வலியுறுத்தினார்.
கொழும்பில் (Colombo) நேற்று (08) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கோட்டாபயவின் ஆட்சிக் காலம்
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், “சட்டமா அதிபர் திணைக்களத்தின் மீது ஜனாதிபதிக்கோ அல்லது அமைச்சர்களுக்கோ அழுத்தம் பிரயோகிக்க முடியாது. அந்த வகையில் எந்தவொரு வழக்கு விசாரணைகளையும் துரிதப்படுத்துமாறும் உத்தரவிடவும் முடியாது.
நல்லாட்சி அரசாங்கத்தில் லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதன் பின்னர் கோட்டாபய ராஜபக்சவின் (Gotabaya Rajapaksa) ஆட்சி காலத்தில் அந்த விசாரணைகளை முன்னெடுத்து வந்த ஷானி அபேசேகர, ரவி செனவிரத்ன உள்ளிட்டோர் அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளாக்கப்பட்டனர்.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளராக லசந்த கொலை தொடர்பில் நல்லாட்சியின் போது விசாரணைகளை முன்னெடுத்ததைப் போன்று, அந்த நடவடிக்கைகளை தற்போது மீண்டும் ஆரம்பிக்குமாறு ஷானி அபேசேகரவைக் கோருகின்றோம். 15ஆண்டுகளின் பின்னராவது லசந்தவுக்கான நீதியை நிலைநாட்டுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்துகின்றோம்.
நம்பிக்கையில்லா பிரேரணை
இது இவ்வாறிருக்க மறுபுறத்தில் அரசாங்கம் சட்டமா அதிபரை பதவி நீக்குவதற்கான சதித்திட்டங்களையும் முன்னெடுத்து வருகிறது. அதற்காக லசந்தவின் மகள் சட்டமா அதிபருக்கெதிராக நம்பிக்கையில்லா பிரேரணையைக் கொண்டு வருமாறு எழுதிய கடிதத்தைப் பயன்படுத்திக் கொள்ள அரசாங்கம் முற்படுகிறது.
சட்டமா அதிபருக்கு அழுத்தம் பிரயோகித்து அவரை பதவி விலகச் செய்வதே அரசாங்கத்தின் நோக்கமாகும். இது முற்று முழுதாக தவறான விடயமாகும்.
சட்டமா அதிபர் திணைக்களத்தின் செயற்பாடுகளில் சில குறைபாடுகள் இருக்கலாம். எனினும் அவற்றை நிவர்த்தி செய்வதற்கு பல்வேறு வழிமுறைகள் காணப்படுகின்றன. அதனை விடுத்து சட்டமா அதிபர் திணைக்கள செயற்பாடுகளை அரசியல் மயமாக்குவது பொருத்தமற்றது.
லசந்தவின் மகள் மற்றும் மனைவியைப் பயன்படுத்திக் கொண்டு நாடகமொன்றை அரசாங்கம் அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது. நாம் இதனை வெளிப்படுத்த நடவடிக்கை எடுத்ததால் தான் அரசியல் நெருக்கடிகளின் போது வன்முறைகளால் தீக்கிரையாக்கப்பட்ட வீடுகளுக்காக பெற்றுக் கொண்ட இழப்பீட்டு பெயர் பட்டியலை வெளியிட்டு அரசாங்கம் மக்களை திசை திருப்புகிறது. ” என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)