மாகாண சபைத் தேர்தல் : அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை
மாகாண சபைத் தேர்தலை எந்த முறைமையின் கீழ் நடத்துவது என்பதை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கான நாடாளுமன்ற விசேட தெரிவுக் குழுவொன்றை நியமிப்பதற்கான யோசனை விரைவில் நிறைவேற்றப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சபை முதல்வர் பிமல் ரத்நாயக்கவால் (Bimal Rathnayake) சமர்ப்பிக்கப்பட்டுள்ள இந்த யோசனை நாடாளுமன்றத்தின் நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கலப்பு தேர்தல் முறைமை, வாக்களிக்கும் உரிமை மற்றும் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் வாக்களிப்பதற்கான உரிமையை உறுதிப்படுத்துதல் உள்ளிட்ட தேர்தல் முறைமையொன்றை உருவாக்குவதற்கு விரிவான விவாதங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
இந்த நிலையில், தெரிவுக் குழுவின் அறிக்கை அதன் முதல் கூட்டத் தினத்திலிருந்து மூன்று மாத காலத்திற்குள் அல்லது நாடாளுமன்றத்தினால் நீடிக்கப்பட்ட காலத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை, மாகாண சபைத் தேர்தலை அடுத்த வருடத்தில் நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |