துப்பாக்கி முனையில் கைதிகள் மிரட்டப்பட்ட விவகாரம்- உண்மையை மூடிமறைக்க முயன்ற அதிகாரிகள் பதவியில் தொடர்வது எவ்வாறு?
அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை துப்பாக்கி முனையில் அச்சுறுத்திய முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தேயின் அத்துமீறிய செயற்பாடானது சர்வதே அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இந்த சம்பவம் தொடர்பில் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய மற்றும் சிறைச்சாலை அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்கவிடம் ஊடகங்கள் கேள்வி எழுப்பியிருந்தன. எனினும், அவ்வாறான சம்பவம் எதுவும் நடக்கவில்லலை என்று அவர்கள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், நடந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று நேற்றைய தினம் லொஹான் ரத்வத்தே இராஜினாமா செய்திருந்தார். ஆகவே அதனடிப்படையில், துஷார உபுல்தெனிய மற்றும் சந்தன ஏக்கநாயக்க ஆகியோர் சம்பவத்தை மூடிமறைக்க வேண்டுமென்றே ஊடகங்களுக்கு பொய் கூறியமை வெட்டவெளிச்சமாகியுள்ளது.
ஆகவே அநுராதபுரம் சிறையில் தமிழ் அரசியல் கைதிகளை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் கைதிகள் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சுப் பதவியை லொஹான் ரத்வத்தே இராஜினாமா செய்துள்ள நிலையில், சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய எவ்வாறு தனது பதவியில் தொடர்கிறார் என்ற கேள்விகள் எழுந்துள்ளன.