இலங்கையில் வெளிநாட்டு கடனுதவியின்றி புனரமைக்கப்பட்ட தொடருந்து பாதை விரைவில் திறக்கப்படும்!
அநுராதபுரத்தில் இருந்து மிஹிந்தலை வரையிலான 11 கிலோமீற்றர் நீளமான தொடருந்து பாதை முழுமையாக புனரமைக்கப்பட்டு எதிர்வரும் ஜனவரி 5ஆம் திகதி திறந்து வைக்கப்படும் என்று வெகுஜன ஊடகத்துறை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர், அமைச்சரவைப் பேச்சாளர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (15) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
வெளிநாட்டு கடனுதவியின்றி

முன்னாள் அதிபர் ரணசிங்க பிரேமதாசவினால் நிர்மாணிக்கப்பட்டு தற்போது கைவிடப்பட்டுள்ள இந்த தொடருந்து பாதையை வெளிநாட்டு கடனுதவியின்றி அனுராதபுரத்திலிருந்து ஓமந்தை வரையிலான தொடருந்து பாதையை புனரமைக்கும் பணிகளில் எஞ்சியிருந்த பயன்படுத்தக்கூடிய பொருட்களைப் பயன்படுத்தி சீரமைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
அனுராதபுரத்தில் இருந்து மிஹிந்தலை வரை புதிய தொடருந்தை இயக்குவதற்கு தேவையான பணிகள் தொடர்பில் தொடருந்து திணைக்களத்திற்கு பணிப்புரை வழங்கியிருந்ததாகவும், இதனை சிலர் தடுத்து நிறுத்த முற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எனவே, இது தொடர்பில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனறும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.