ஆயுர்வேதத் துறையில் 304 வைத்தியர்களுக்கு நியமனம் : வெளியான அறிவிப்பு
ஆயுர்வேதத் துறையில் அங்கீகரிக்கப்பட்ட 304 வைத்தியர்களுக்கு நியமனங்களை விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayathissa) தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் கைதடி சித்த போதனா வைத்தியசாலையின் (Kaithady Siddha Teaching Hospital) ஆய்வைத் தொடர்ந்து நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.
ஆயுர்வேதத் துறையில் 1,000க்கும் மேற்பட்ட வைத்தியர்கள் இருந்தாலும், அனைவரையும் அரசாங்கப் பணியில் இணைப்பது சாத்தியமில்லை எனவும் உள்ளகப் பயிற்சிக்குப் பின்னர் உள்நாட்டிலோ வெளிநாட்டிலோ பணி வாய்ப்புகள் வழங்கப்படும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
சுற்றுலாத் துறையில் இணைத்தல்
மேலும், சில வைத்தியர்களை சுற்றுலாத் துறையில் இணைப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
நாட்டில் மேற்கத்திய வைத்தியத்துடன் ஆயுர்வேதம், சித்தம், மற்றும் யுனானி வைத்திய முறைகளும் சுகாதார அமைச்சின் கீழ் இயங்குவதாகவும், இவ்வாண்டு பாதீட்டில் உள்ளூர் வைத்தியத்திற்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இத்துறைகள் புறக்கணிக்கப்படாமல், அனைத்து வைத்திய முறைகளுக்கும் உரிய முக்கியத்துவம் வழங்குவது தனது பொறுப்பு எனவும், இவை குறைவாக கவனிக்கப்படும் துறைகள் அல்ல எனவும் நளிந்த ஜயதிஸ்ஸ வலியுறுத்தியமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

