டித்வா புயலால் சேதமடைந்த வழிபாட்டுத் தலங்கள் குறித்து வெளியான அறிவிப்பு
நாட்டில் கடந்த வருடம் ஏற்பட்ட டித்வா புயலால் சேதமடைந்த, தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த ஆறு வழிபாட்டுத் தலங்களின் புனரமைப்புப் பணிகள் இந்த மாதம் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தப் புனரமைப்பு பணிகளுக்காக 550 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக புத்தசாசனம், சமய மற்றும் பண்பாட்டு விவகாரங்கள் அமைச்சின் செயலாளர் டபிள்யூ. பி. சேனதீரா தெரிவித்தார்.
மேலும், இந்தப் புனரமைப்புத் திட்டங்கள் மத்திய பண்பாட்டு நிதியத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
40 மில்லியன் ரூபாய்
அத்துடன் புயலால் சேதமடைந்த மேலும் 58 வழிபாட்டுத் தலங்களைப் புனரமைப்பதற்காக 40 மில்லியன் ரூபாய் ஏற்கனவே விடுவிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை 201 வழிபாட்டுத் தலங்களைப் புனரமைப்பதற்காக விரைவில் 200 மில்லியன் ரூபாய் விடுவிக்கப்படும் என்றும் செயலாளர் தெரிவித்தார்.
இந்தநிலையில், டித்வா புயலால் சேதமடைந்த எலஹேரா அணைக்கட்டின் புனரமைப்புப் பணிகள் மே 10ஆம் திகதி தொடங்கவுள்ளதாக தொல்பொருள் திணைக்களத்தின் பதில் பணிப்பாளர் நாயகம் செனரத் விக்ரமசிங்க தெரிவித்தார்.
மேலும் இந்தப் பழுதுபார்ப்புப் பணிகள், தொல்பொருள் திணைக்களத்தின் மேற்பார்வையின் கீழ் நீர்ப்பாசனத் திணைக்களப் பொறியாளர்களால் மேற்கொள்ளப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |