ஈழத்தமிழர்களுக்காக உலக அரங்கில் நீதிகோரியவர் 'டெஸ்மண்ட் டுட்டு' : புலம்பெயர் தமிழ் அமைப்புகள் இரங்கல் செய்தி
ஈழத்தமிழ் இனத்தின் மீதான ஒடுக்குமுறைகளுக்கு உலக அரங்கில் நீதிகோரிய தென்னாபிரிக்க பேராயரும் நோபல் சமாதான விருதாளருமான டெஸ்மண்ட் டுட்டுவின் மரணத்தை முன்னிறுத்தி புலம் பெயர் தமிழ் அமைப்புகள் தமது இரங்கல் செய்திகளை வெளியிட்டு வருகின்றன.
உலகத் தமிழர் பேரவை வழங்கிய இரங்கல் செய்தியில் மறைந்த பேராயர், நிறவெறி ஒடுக்குமுறைக்கு உள்ளான தென்னாபிரிக்கர்களைப் போலவே இலங்கையில் ஈழத்தமிழர்கள் மீதான ஒடுக்குமுறை இருப்பதான நிலைப்பாட்டை தமது அமைப்பிடம் வெளிப்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
2016 ஆம் ஆண்டில் அவுஸ்ரேலிய அரசாங்கத்துடன் இணைந்து இலங்கையில் மேற்கொள்ளப்படவிருந்த செயற்திட்டத்துக்காக தமது அமைப்புக்கு பேராயர் டெஸ்மண்ட் டுட்டு வாழ்த்துச்செய்தியை வழங்கியிருந்தாகவும் ஆனால் இலங்கை அரசாங்கத்தின் எதிர்மறைநகர்வுகளால் அந்தச் செயற்திட்டம் இடம்பெறாமல் போனதாகவும் உலகத்தமிழர்பேரவை தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளது.
விடுதலை இறையியல் மூலம் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக போராடிய டெஸ்மண்ட் டுட்டு நேற்று தனது 90ஆவது வயதில் காலமாகியிருந்த நிலையில் தற்பொது அவருக்குரிய மதிப்பளிப்புகள் செய்யப்பட்டு வருகின்றன.
இலங்கையில் தமிழ்மக்கள் மீது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணைகளை செய்வதற்காக அனைத்துலக குழு ஒன்று உருவாக்கப்பட வேண்டுமென கடந்த 2014 இல் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் ஒரு கோரிக்கையை முன்வைத்த டெஸ்மண்ட் டுட்டு, இலங்கையில் நடைபெற்ற பொதுநலவாய மாநாட்டை உலக நாடுகள் புறக்கணிக்க வேண்டும் எனவும் குரல் கொடுத்தமை குறிப்பிடத்தக்கது.