ஆரம்பத்தில் NPPக்கு ஆதரவாக செயற்பட்ட அர்ச்சுனா எம்.பி : விமல் வீரவன்ச பகிரங்கம்
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் ஆரம்ப காலத்தில் தேசிய மக்கள் சக்திக்கு சார்பாகவே செயற்பட்டதாகவும் தற்போது அவர் யார்த்தத்தை விளங்கிக் கொண்டுள்ளதாகவும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.
தேசிய சுதந்திர முன்னணியின் காரியாலயத்தில் நேற்று (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கில் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு அரச அனுசரணையுடன் இடம்பெறுகிறது. வடக்கு மற்றும் கிழக்கில் தமிழ் இனவாதிகளும், அடிப்படைவாதிகளும் சுதந்திரமாக செயற்படுகிறார்கள்.
சிறந்த இலங்கையராக செயற்படுகிறார்
யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து, தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தி இறையான்மையை பாதுகாத்த முப்படையின் தளபதிகளும், அவர்களின் குடும்பத்தாரும், முன்னாள் அரச தலைவர்களின் குடும்பத்தாரையும் அரசாங்கம் இன்று நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சிங்களவர்களின் உரிமை திட்டமிட்ட வகையில் மறுக்கப்படுகிறது. சிங்களவர்களின் உரிமைகளை இல்லாதொழிக்கும் செயற்பாடுகளுக்கு அரசாங்கம் ஆதரவு வழங்குவதை அவதானிக்க முடிகிறது.
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் ஆரம்ப காலத்தில் தேசிய மக்கள் சக்திக்கு சார்பாகவே செயற்பட்டார். தற்போது அவர் யார்த்தத்தை விளங்கிக் கொண்டு நாட்டை பிளவுப்படுத்துமாறு கோரப் போவதில்லை.
ஆகவே அவர் தற்போது சிறந்த இலங்கையராகவே செயற்படுகிறார் அது எமக்கு பிரச்சினையல்ல“ என்று தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |