நாளையதினம் அதிபர் செயலகம் விரையவுள்ள அதிகாரிகள் குழு
அதிபர் மாளிகைக்கு தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் குழு
ஆர்ப்பாட்டக்காரர்களால் கைப்பற்றப்பட்டு முற்றாக அழிந்து சேதமடைந்த கலாசார சொத்துக்களை பதிவு செய்வதற்காக தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று நாளை (27) அதிபர் மாளிகைக்கு அனுப்பப்படவுள்ளதாக தொல்பொருள் உதவிப் பணிப்பாளர் (மேற்கு மாகாணங்கள்) செல்வி ஷியாமலி ராஜபக்ஷ தெரிவித்தார்.
காவல்துறையின் கோரிக்கைக்கு அமைய இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதிபர் மாளிகையில் உள்ள கலாசார சொத்துக்கள் தொடர்பில் தொல்பொருள் திணைக்களத்திடம் தெளிவான தகவல்கள் இல்லாததால், அதிபர் மாளிகையில் உள்ள பொருட்களின் பட்டியலை சரிபார்த்து தகவல்களை பதிவு செய்வதாக நம்புவதாக தெரிவித்த திருமதி ராஜபக்ஷ, இந்த தகவல் எதிர்கால விசாரணைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.

நான்கு முக்கிய கட்டடங்கள் ஆக்கிரமிப்பு
கொழும்பில் உள்ள அதிபர் மாளிகை உட்பட நான்கு முக்கிய கட்டடங்கள் அண்மையில் ஆர்பாட்டக்காரர்களால் ஆக்கிரமிக்கப்பட்டன. அதன் பிறகு இந்த கட்டடங்கள் சேதமடைந்தன. அதிபர் செயலகம், டெம்பிள் ஹவுஸ் மற்றும் பிரதமர் அலுவலகம் ஆகிய கட்டடங்களே சேதமடைந்துள்ளன.
அந்த கட்டடங்களையும் தொல்லியல் துறை அதிகாரிகள் சமீபத்தில் ஆய்வு செய்தனர். இதற்கிடையில், சேதமடைந்த சில கலாசார சொத்துக்களை புனரமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருவதாக தொல்பொருள் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

தொல்பொருள் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் அனுர மனதுங்கவின் பணிப்புரையின் பேரில், தொல்லியல் உதவிப் பணிப்பாளர் (மேற்கு மாகாணங்கள்) திருமதி ஷியாமலி ராஜபக்ஷ உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இது தவிர குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் குழுவும் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.