நிலவின் மறுபக்கத்தை முதன்முறையாக நேரில் காணவுள்ள மனிதர்கள்! ஆர்டெமிஸ் II சாதனை
நாசாவின் ஆர்டெமிஸ் II பணியில் பங்கேற்கும் விண்வெளி வீரர்கள் சரித்திரம் படைக்கத் தயாராக உள்ளனர்.
இதன்படி ஆர்டெமிஸ் II குழுவுடன் இணைந்து நிலவின் மறுபக்கத்தை மனிதர்கள் முதன்முறையாக நேரில் காணும் வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தை உலகம் முழுவதும் உள்ளவர்களுக்கும் பார்க்கும் வாய்ப்பை நாசா நிறுவனம் ஏற்படுத்தியுள்ளது.
நாசா விண்வெளி வீரர்களான ரீட் வைஸ்மேன் (கட்டளைத் தலைவர்), விக்டர் குளோவர் (விமானி), கிறிஸ்டினா கோச் மற்றும் கனடிய விண்வெளி முகமையின் (CSA) விண்வெளி வீரர் ஜெர்மி ஹேன்சன் ஆகிய நான்கு பேர் கொண்ட இந்தக் குழு, ஏப்ரல் 1, 2026 அன்று ஃப்ளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து SLS விண்கலம் மூலம் வெற்றிகரமாக ஏவப்பட்டது.
10 நாள் பயணம்
நிலவை நோக்கி Orion விண்கலத்தில் பயணிக்கும் இவர்கள், நிலவைச் சுற்றி வரும் 10 நாள் பயணத்தின்போது, நிலவின் மறுபக்கத்தை நெருங்கும் போது அதன் மேற்பரப்பிலிருந்து 4,000 முதல் 6,000 மைல்கள் (சுமார் 6,400 முதல் 9,700 கிலோமீட்டர்) தொலைவுக்குள் செல்லவுள்ளனர்.

நிலவின் சில பகுதிகளைத் தங்கள் சொந்தக் கண்களால் நேரில் காணும் முதல் மனிதர்கள் இவர்களாகவே இருப்பர்.
மேலும், 1970-ல் அப்பல்லோ 13 குழுவினர் பூமியிலிருந்து 248,655 மைல்கள் (சுமார் 4,00,171 கிலோமீட்டர்) தொலைவில் பயணித்த சாதனையை முறியடித்து, மனித வரலாற்றில் பூமியிலிருந்து இதுவரை யாரும் செல்லாத மிகத் தொலைவான இடத்தை எட்டும் பாதையில் இந்தக் குழு உள்ளது.
நாசா வெளியிட்ட காணொளி
ஆர்டெமிஸ் II பணியின் போது, இவர்கள் சுமார் 252,757 மைல்கள் (சுமார் 4,06,773 கிலோமீட்டர்) வரை செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் பணி, எதிர்காலத்தில் நிலவில் நிலையான மனித வாழ்க்கையை ஏற்படுத்தும் ஆர்டெமிஸ் திட்டத்தின் முக்கிய அடுத்த கட்டமாகக் கருதப்படுகிறது.
இது தொடர்பில் நாசா வெளியிட்ட காணொளியில் விண்வெளி வீரர்கள் தங்கள் பயணத்தின் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டு, பூமியுடன் தொடர்பில் இருந்து வருகின்றனர். மேலும், உலகெங்கிலும் உள்ள விண்வெளி ஆர்வலர்கள் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பயணத்தை உற்சாகத்துடன் கவனித்து வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |