அஸ்வெசும நிதி மோசடி : ஆறு ஆசிரியர்களின் கணக்கில் வரவு வைக்கப்பட்ட பணம்
அஸ்வெசும நிதியிலிருந்து மோசடி செய்யப்பட்ட பணத்தை ஹட்டன் வலயக் கல்வி அலுவலகத்தைச் சேர்ந்த ஆறு ஆசிரியர்களின் கணக்குகளில் வரவு வைத்த சம்பவம் தொடர்பில், அந்த ஆசிரியர்களை தற்காலிகமாக இடைநிறுத்த மத்திய மாகாண கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பிரதேச செயலகத்தின் பிரிவு பொறுப்பு அதிகாரிகள் இருவருக்கும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
இதன்படி குறித்த இருவரையும் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு ஹட்டன் நீதவான் பீட்டர் போல் உத்தரவிட்டுள்ளார்.
ஷமோசடி செய்யப்பட்ட மொத்தப் பணம் 2 கோடி ரூபாய்க்கும் அதிகம்
ஹட்டன் கோட்ட விசாரணைப் பிரிவின் காவல்துறை அதிகாரிகள் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த விடயங்களில், இந்த நிதி மோசடி தொடர்பில் மேலும் 13 சந்தேக நபர்கள் கைது செய்யப்படவுள்ளதாக தெரிவித்தனர்.
மோசடி செய்யப்பட்ட மொத்தப் பணம் 2 கோடி ரூபாய்க்கும் அதிகமான பெறுமதியுடையது என்பதால், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் (CID) ஒப்படைப்பதற்கான கோப்புகள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

நிதி அமைச்சின் கணக்காய்வு அதிகாரிகள் மற்றும் நுவரெலியா மாவட்ட செயலகத்தின் கணக்காய்வுப் பிரிவு மேற்கொண்ட விசாரணைகளில், சந்தேகத்திற்குரிய இரண்டு அதிகாரிகளும் ஹட்டன் வலயக் கல்வி அலுவலகத்தின் கீழ் பணிபுரியும் ஆறு ஆசிரியர்களின் கணக்குகளில் இந்த பணத்தை வரவு வைத்துள்ளமை தெரியவந்துள்ளது.
6 ஆசிரியர்கள் தற்காலிகமாக இடைநிறுத்தம்
சம்பந்தப்பட்ட ஆசிரியர்களின் வங்கிக் கணக்கு அறிக்கைகளையும் பரிசோதிக்க வேண்டும் என நுவரெலியா மாவட்ட செயலாளர் துஷாரி தென்னகோன் மத்திய மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு அறிவித்ததையடுத்து, இந்த 6 ஆசிரியர்களின் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஒரு சந்தேக நபரின் சகோதரரின் கணக்கிலும் பெருமளவு பணம் வரவு வைக்கப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. நுவரெலியா மாவட்ட செயலகத்தில் உயர் பதவியில் இருந்த அந்த சகோதரரின் சேவையையும் தற்காலிகமாக இடைநிறுத்த மாவட்ட செயலாளர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |