தாமதிக்காமல் உடன் வீட்டிற்குச் செல்லுங்கள் : அமெரிக்க இராணுவத்திற்கு ஈரான் கடும் எச்சரிக்கை
ஈரானிய அபிலாஷைகளுக்கு எதிராக அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தினால், அதற்கு மிக வேகமான, சக்திவாய்ந்த மற்றும் வேதனையான பதில் கிடைக்கும் என்று ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகரும், தலைமை பேச்சுவார்த்தையாளருமான மொஹம்மத் பாகர் கலிபாஃப் எச்சரித்துள்ளார்.
அமெரிக்கப் படைகள் தாமதமாகும் முன் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். 'சம விகித பதிலடி' காலம் முடிந்துவிட்டதாகவும், விளையாட்டின் விதிகள் மாறிவிட்டதாகவும் வோஷிங்டன் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.
கடுமையான பதிலடி கொடுக்கப்படும்
உலகின் எண்ணெய் விநியோகத்தில் சுமார் 20% கொண்டு செல்லப்படும் ஹோர்முஸ் நீரிணையில் அதிகாரத்தை நிலைநிறுத்தும் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்கப் படைகள் ஈரானிய எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்திய மறுநாள் இந்த அறிக்கை வெளியிடப்பட்டது.

நாடாளுமன்றத்தில் உரையாற்றியும், ஒரு டெலிகிராம் செய்தியை வெளியிட்டும், ஈரானின் பாதுகாப்பிற்கு எதிரான எந்தவொரு தாக்குதலுக்கும் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று கலிபாஃப் கூறினார்.
போர்க்களத்தின் உண்மையான நிலை
போர்க்களத்தின் உண்மையான நிலையைத் திரிபுபடுத்த அமெரிக்கத் தலைவர்கள் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட காணொளிகளை பயன்படுத்துவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

மேலும், விதிக்கப்பட்ட தடைகளை எதிர்கொள்ள உள்நாட்டு உற்பத்தி மற்றும் இறக்குமதி கட்டுப்பாடு மிகவும் கடுமையாக நிர்வகிக்கப்பட வேண்டும் என்று ஆறு மாதங்களாக நடைபெற்று வரும் இந்த போரை முடிவுக்கு கொண்டுவரும் பேச்சுவார்த்தைகளில் ஈரானிய தரப்பின் தலைவராக செயல்படும் கலிபாஃப் வலியுறுத்தினார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |