ஊடகவியலாளர் சமுதித சமரவிக்கிரமவின் வீட்டின் மீதான தாக்குதல் ஒரு இழிவான செயல் - சஜித் காட்டம்
சிரேஷ்ட ஊடகவியலாளர் சமுதித சமரவிக்கிரமவின் வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதலை ஓர் இழிவான தாக்குதலுக்கு இணையானதாக வெறுப்புடன் நாங்கள் கண்டிக்கிறோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் தாக்கப்பட்டமைக்கு கண்டித்து எதிர்க்கட்சித் தலைவர் வெளியிட்டுள்ள விசேட ஊடக அறிக்கையொன்றின் மூலம் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
இச்சம்பவத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவுடன் இணைந்து அவரது வேதனைகளை பகிர்ந்து கொள்ளும் அதேவேளை, இவ்விடயத்தில் அவருக்கு எமது மனப்பூர்வமான ஆதரவைத் தெரிவிக்க விரும்புகின்றோம்.
அவருக்கு தேவைப்படும் உதவிகளை தயக்கமின்றி வழங்குவோம் என்றும் குறிப்பிடுகிறோம்.
அவமானகரமான குண்டர் தாக்குதல் குறித்து வெளிப்படையாக, பாரபட்சமற்ற,நியாயமான விசாரணையை நடத்தி, இதனுடன் நேரடியாகவும் மறைமுகமாகவும் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம்.
கருத்து சுதந்திரமானது அனைவரதும் உரிமையாகும் என உலக மனித உரிமைகள் பிரகடனம் மூலமும், சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் பிரகடனம் மூலமும், மனித உரிமைகள் தொடர்பான ஐரோப்பிய பிரகடனம் மூலமும் எங்கள் நாட்டு அரசியல் யாப்பின் மூலமும் மிகத் தெளிவாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதோடு,
அது எவ்வாறான சூழ்நிலையிலும் புறக்கணிக்கப்பட முடியாது என்பதும் அவதானிக்கப்பட வேண்டிய விடயமாகும்.
ஊடக சுதந்திரம் என்பதனால் கருதப்படுவது யாதெனில் விமர்சிப்பது மற்றும் அதற்கு எதிரான கருத்துக்களை தெரிவிப்பதற்குள்ள சுதந்திரத்தையாகும் என ஜோஜ் ஓவல் அவர்கள் தெரிவித்துள்ளார்.
ஒரு நாட்டின் நான்காவது அரசாங்கமாக கருதப்படும் ஊடகங்கள் அல்லது ஊடகவியலாளர்கள் மீது எந்தவிதமான தணிக்கையையும் விதிக்க முடியாது என்றும் விதிக்க முடியுமான ஒரே ஒரு தணிக்கையானது “சுய தணிக்கையாகும்”என்பதை உறுதியாக நம்புகிறோம்.
ஊடகவியலாளர் சமுதித சமரவிக்கிரமவுக்கும் இது பொருந்தும் என்பதால் ஊடக சுதந்திரத்திற்காக போராடும் அனைவருடனும் எந்தவிதமான நிபந்தனைகளும் இன்றி நாம் அவர்களுடன் கைகோர்க்கிறோம் என்பதை கூறிக்கொள்கிறேன் என்று அவர் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.