முல்லைத்தீவில்முறைகேடாக பயன்படுத்தப்பட்ட அரச வாகனங்கள்: தாக்கப்பட்ட ஐபிசி தமிழின் பிராந்திய செய்தியாளர்
முல்லைத்தீவு மாவட்ட வன வள திணைக்கள அதிகாரி ஒருவர் உள்ளிட்ட குழுவினர், அரச வாகனங்களை முறைகேடாகப் பயன்படுத்தி மது அருந்தியதோடு, சம்பவ இடத்திற்கு வந்த ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் அவர்களைத் தாக்க முயன்றதோடு,"இடம் தெரியாமல் மோதுகிறாய்" என மிரட்டல் விடுத்த சம்பவம் பனிக்கன்குளம் பகுதியில் நேற்றிரவு (07.04.2026) இடம்பெற்றுள்ளது.
மேலும் தெரியவருவதாவது,
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் கிராமத்தில் அமைந்துள்ள மாங்குளம் வட்டார வன வள திணைக்கள அலுவலகத்தில் பணியாற்றும் ஒரு அதிகாரியின் வீட்டில், கடந்த 07.04.2026 இரவு 7 மணியளவில் முல்லைத்தீவு மாவட்ட வன அதிகாரி உள்ளிட்ட சிலர் WP PD 3060 இலக்கமுடைய நீல நிற கப் வாகனத்திலும், மேலும் சில வன ஊழியர்கள் WP PF 9868 இலக்கமுடைய வாகனத்திலும் வருகை தந்து மது விருந்தில் ஈடுபட்டுள்ளனர்.
சட்டவிரோத மணல் அகழ்வு
இப்பகுதியில் வன வள திணைக்கள அதிகாரிகளின் ஆதரவுடன் சட்டவிரோத மணல் அகழ்வு மற்றும் காடழிப்பு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாகவும், இவற்றுக்காக அதிகாரிகள் இலஞ்சம் பெற்றுக்கொள்வதாகவும், சட்டவிரோத மணல் மாபியாக்கள் மற்றும் மரக்கடத்தல் கும்பல்களால் இத்தகைய மது விருந்துகள் ஏற்பாடு செய்யப்படுவதாகவும் தொடர்ச்சியான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், இவ்வாறான ஒரு சம்பவம் நேற்று பதிவாகியுள்ளது.
மது விருந்துக்காக அரச வாகனங்கள் பயன்படுத்தப்பட்ட நிலையில், பனிக்கன்குளம் சந்தி பகுதியில் குறித்த இரு வாகனங்களும் சுமார் 3½ மணி நேரத்திற்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், சம்பவ இடத்திற்கு ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் சென்றபோது, மதுபோதையில் இருந்த மாவட்ட வன அதிகாரி உள்ளிட்ட குழுவினர் அவருடன் முரண்பட்டனர்.
மேலும், மாவட்ட வன அதிகாரி ஊடகவியலாளரைத் தாக்க முயன்றதோடு, "இடம் தெரியாமல் மோதுகிறாய்" என மிரட்டல் விடுத்தார்.இச்சம்பவம் தொடர்பில் உடனடியாக மாங்குளம் காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டதோடு, அரச வாகனங்களை முறைகேடாகப் பயன்படுத்தி மது அருந்தியமை தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் வடமாகாண சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபருக்கும் ஊடகவியலாளரால் அறிவிக்கப்பட்டது.
எனினும், காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வர தாமதித்த நிலையில், வன அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினர் அப்பகுதியை விட்டு தப்பிச் சென்றனர்.
பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த மாங்குளம் காவல்துறையினர், ஊடகவியலாளரை காவல் நிலையம் வந்து முறைப்பாடு பதிவு செய்யுமாறு கூறியுள்ளனர்.
அதன்படி ஊடகவியலாளர் காவல் நிலையம் சென்றபோது, WP PF 9868 வாகனத்தில் வந்த வன வள திணைக்கள அதிகாரிகள் ஏற்கனவே காவல் நிலையம் சென்று ஊடகவியலாளருக்கு எதிராக முறைப்பாடு ஒன்றைப் பதிவு செய்திருந்தனர்.
ஊடகவியலாளர் மீது மிரட்டல்
அப்போது, மாங்குளம் காவல் நிலைய பதவி நிலை அதிகாரி ஒருவர், வன அதிகாரிகளிடம் எதுவும் பேசாமல் ஊடகவியலாளரை மட்டும் அழைத்து, கடும் தொனியில் மிரட்டும் வகையில், "தேவையில்லாமல் பிரச்சினைகள் போடக்கூடாது.

ஊடகவியலாளர் என்றால் எதுவும் செய்வீர்களா? எனக் கூறியதோடு, தேவையற்ற வார்த்தைப் பிரயோகங்களைப் பயன்படுத்தி அச்சுறுத்தியுள்ளதாக கூறியுள்ளார்.
மேலும், "பிரச்சினை போட்டால் உமது ஊடக அடையாள அட்டையையும் இல்லாமல் செய்வேன்" என மிரட்டியுள்ளார்.
பின்னர் வேறு ஒரு காவல்துறை அதிகாரி முறைப்பாட்டைப் பதிவு செய்தபோது, ஊடகவியலாளர் மதுபோதையில் இருந்த அதிகாரிகளை பரிசோதனை செய்யுமாறு கோரியும், அதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
அரச வாகனங்களைத் தவறாகப் பயன்படுத்தி மதுபோதையில் இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், ஊடகவியலாளர் மீது மிரட்டல் விடுத்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள சண்முகம் தவசீலன், "இவர்கள் அனைவரும் இணைந்தே சட்டவிரோத தொழில் நடவடிக்கைகளுக்கு துணை போகின்றனர் என்பதற்கான சான்று இது" எனக் குற்றம் சுமத்தியுள்ளார்.
இதனிடையே, குறித்த சம்பவம் தொடர்பில் மாவட்ட செயலாளர், மனித உரிமைகள் ஆணைக்குழு, காவல்துறை ஆணைக்குழு உள்ளிட்ட தரப்புகளிடம் முறைப்பாடு செய்யவுள்ளதாக ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார்.இந்நிலையில், இன்று (08.04.2026) நண்பகல் 12 மணிக்கு இரு தரப்பினரும் விசாரணைக்காக மாங்குளம் காவல் நிலையத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |