நீர்கொழும்பு சிறைச்சாலை துப்பாக்கிச் சூடு: வௌியானது காரணம்
நீர்கொழும்பு சிறைச்சாலையில் சிறைக்கைதிகள் சிறைச்சாலையின் முதலாவது இரும்புக்கதவை உடைத்துக் கொண்டு மரக்கதவு அருகில் வரை வந்திருந்ததாகவும், மரக்கதவையும் உடைத்து அவர்கள் வெளியேறியிருந்தால் நிலைமையைக் கட்டுப்படுத்த முடியாமல் போயிருக்கும் என்ற காரணத்தாலேயே படையினர் துப்பாக்கி சூட்டை நடத்தியதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் பிரசாத் ஹேமந்த குமார இன்று (07) விளக்கமளித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
இரும்புக்கதவை உடைத்துக்கொண்டு வந்த கைதிகள், அங்கிருந்த சிறை அதிகாரிகளைத் தாக்கியுள்ளதாகவும், சிறை அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் கைதிகள் தப்பியோடுவதைத் தடுப்பதற்கும் எடுக்கக்கூடிய ஒரேயொரு வழிமுறையாகவே பாதுகாப்புப் பிரிவினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர் என்றும் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.
பேரழிவு ஏற்பட்டிருக்கும்
"சிறைச்சாலை வளாக அமைப்பின்படி பிரதானமாக இரண்டு கதவுகள் உள்ளன. முதலாவதாக இரும்புக்கதவும், அதற்கு அடுத்ததாக மரக்கதவும் இருக்கும். இந்தக் கைதிகள் இரும்புக்கதவை உடைத்துக்கொண்டு மரக்கதவை நோக்கி வந்திருந்தனர். இந்த மரக்கதவுக்கும் இரும்புக்கதவுக்கும் இடைப்பட்ட பகுதியில் தான் பெறுமதிமிக்க உபகரணங்கள் உள்ளன.

இந்தக் கைதிகள் இரும்புக்கதவை உடைத்து, இந்த மரக்கதவையும் உடைத்துக்கொண்டு வெளியே வந்திருந்தால் ஏற்பட்டிருக்கக்கூடிய அழிவை என்னால் மதிப்பிட முடியாது. எனவே, இந்த நேரத்தில் சிறை அதிகாரிகள் தங்களது உயிரைப் பணையம் வைத்து இவ்வாறு செயற்படாவிட்டிருந்தால் நிலைமை மோசமாகியிருக்கும். சிறை அதிகாரிகள் அவ்வாறு செயற்படாவிட்டிருந்தால் மிகப்பெரிய அழிவு ஏற்பட்டிருக்கலாம்.
துப்பாக்கிசூடு நடத்துவதற்கான காரணம்
அனைத்து சம்பவங்களும் நடந்து முடிந்திருந்த ஒரு சூழலில், அவர்கள் இரும்புக்கதவை உடைத்து மரக்கதவு அருகில் வரை வந்துவிட்டனர். அந்த நேரத்தில் எங்களது சிறை அதிகாரிகள் பெரும் எண்ணிக்கையானோர் உள்ளே கைதிகளுக்கு மத்தியில் சிக்கியிருந்ததோடு, அவர்கள் தாக்கப்பட்டுக்கொண்டிருந்தனர்.

கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலைத் தடுத்து அவர்களைக் காப்பாற்றுவதற்காகவே அதிகாரிகள் அந்த வளாகத்திற்குள் சென்றிருந்தனர். ஆனால், அந்த அதிகாரிகளும் உள்ளே சிக்கிக்கொண்டனர். அந்த நேரத்தில் தான் கைதிகள் இரும்புக்கதவை உடைத்துக்கொண்டு வெளியே வந்துள்ளனர். இந்த நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காகவே அதிகாரிகள் அந்த மரக்கதவூடாக துப்பாக்கிச் சூடு நடத்தினர்." என்றார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |