இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டுவரப்பட்ட 120 பந்தய புறாக்கள்! பாம்பன் அருகே பறிமுதல்
பாம்பன் வடக்கு துறைமுகத்திலிருந்து நாட்டுப்படகு மூலம் இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 120 பந்தயப் புறாக்கள், அவற்றை ஏற்றிச் சென்ற காருடன் சேர்த்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக, காரில் பயணித்த மதுரையைச் சேர்ந்த இருவரிடம் க்யூ பிரிவு காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டக் கடற்கரை இலங்கைக்கு மிக அருகில் அமைந்துள்ளதால், மண்டபம், மரைக்காயர்பட்டினம், வேதாளை, பாம்பன், குந்துகால், தனுஷ்கோடி உள்ளிட்ட கடற்கரைப் பகுதிகளிலிருந்து நாட்டுப்படகுகள் மூலம் சட்டவிரோதமாக சமையல் மஞ்சள், கடல் அட்டை, மெத்தாம்பெட்டமின், கஞ்சா எண்ணெய், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் இலங்கைக்கு கடத்தப்பட்டு வருவதாகவும், அதேபோல் இலங்கையிலிருந்து தங்கம் மற்றும் வெள்ளிக் கட்டிகள் தமிழகத்திற்கு கடல் வழியாக சட்டவிரோதமாக கடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
காரைச் சுற்றிவளைத்த ராமநாதபுரம் காவல்துறை
இந்தக் கடத்தல் சம்பவங்களைத் தடுக்க, ராமநாதபுரம் மாவட்டத்தில் க்யூ பிரிவு, மத்திய மற்றும் மாநில உளவுத்துறை, இந்திய கடற்படை, கடலோரக் காவல்படை, சுங்கத்துறை, மரைன் காவல்துறை உள்ளிட்ட பாதுகாப்பு அமைப்புகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தபோதிலும், கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில், பாம்பன் வடக்கு துறைமுகத்திலிருந்து நாட்டுப்படகு மூலம் இலங்கைக்கு பந்தயப் புறாக்கள் கடத்தப்படவுள்ளதாக க்யூ பிரிவு ராமநாதபுரம் ஆய்வாளர் ஜீவமணிக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், நேற்று நள்ளிரவு முதல் க்யூ பிரிவு காவல்துறை பாம்பன் வடக்கு துறைமுகம் மற்றும் பாம்பன் பாலம் பகுதிகளில் மறைந்து கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
இன்று அதிகாலை, ராமேஸ்வரம் நோக்கிச் சென்ற கார் ஒன்று பாம்பன் சாலைப் பாலத்தில் நீண்ட நேரமாக சந்தேகத்திற்கிடமான வகையில் நிறுத்தப்பட்டிருந்ததை காவல்துறையினர் அவதானித்துள்ளனர்.
இதையடுத்து, காரைச் சுற்றிவளைத்து அதற்கருகில் நின்றிருந்த இருவரிடம் விசாரணை நடத்தியபோது, அவர்கள் முரண்பாடான பதில்களை வழங்கியதாகக் கூறப்படுகிறது.
120 பந்தயப் புறாக்கள்
இதனால் சந்தேகமடைந்த காவல்துறை, காரைத் திறந்து சோதனையிட்டபோது, அதனுள் இருந்த ஆறு இரும்புக் கூண்டுகளில் மொத்தம் 120 பந்தயப் புறாக்கள் அடைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, பந்தயப் புறாக்களையும் காரையும் பறிமுதல் செய்த க்யூ பிரிவு காவல்துறை, மதுரை சோழவந்தான் பகுதியைச் சேர்ந்த நவாப் ஷெரிப் (22) மற்றும் மதுரை காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்த குமரேசன் (39) ஆகிய இருவரையும் சுங்கத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
இதற்கிடையில், புறாக்கள் மற்றும் காரை பறிமுதல் செய்த பின்னர், பாம்பன் வடக்கு கடற்கரைப் பகுதியில் போலீசார் மேற்கொண்ட சோதனையின் போது, அங்கு நின்றிருந்த நாட்டுப்படகு ஒன்று காவல்துறையை கண்டவுடன் கடலுக்குள் தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தப்பிச் சென்ற அந்த நாட்டுப்படகு தொடர்பில், மரைன் காவல்துறையின் உதவியுடன் பாம்பன் வடக்கு கடற்கரைப் பகுதியில் தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மேலும், கைது செய்யப்பட்ட இருவரிடமும் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், பந்தயப் புறாக்கள் மதுரையிலிருந்து இலங்கைக்கு கடல் வழியாக கடத்துவதற்காகக் கொண்டு வரப்பட்டதாக அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |