சஷீந்திர ராஜபக்சவுக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல்: வெளிநாடு செல்லத் தடை!
ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்காக முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ச உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராகக் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழு இந்த குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது.
இந்த குற்றப்பத்திரிகைகள், கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரவீந்திர பிரேமரத்ன முன்னிலைsrsயில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
பிரதிவாதிகள்
இது குறித்து மேலும் தெரியவருகையில், பிரதிவாதிகள் மூவரில் ஒவ்வொருவரையும் தலா 1 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு தனிநபர் பிணைகளில் விடுவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அத்தோடு பிரதிவாதிகள் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுத்து வெளிநாட்டுப் பயணத்தடையையும் நீதிபதி விதித்துள்ளார்.

மேலும், பிரதிவாதிகளின் கைரேகைகளைப் பெற்று அது தொடர்பான அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு, விசாரணைக்கு முந்தைய மாநாட்டிற்காக (Pre-trial conference) ஒகஸ்ட் ஐந்தாம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இழப்பீட்டுக் கோரிக்கை
இந்த வழக்கில் சேபாலிகா சமன்குமாரி மற்றும் கீர்த்தி பண்டார கொட்டகாம ஆகியோரும் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.
இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின்படி பிரதிவாதிகள் தங்களது அதிகாரப்பூர்வ செல்வாக்கைப் பயன்படுத்தி இழப்பீட்டுப் பணியகத்தின் சில அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்து 8.85 மில்லியன் ரூபா இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுக் கொண்டதாகவும் அதற்கு உடந்தையாக இருந்ததாகவும் ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

கடந்த 2022 மே 9 ஆம் திகதி ஏற்பட்ட வன்முறைகளின் போது செவனகல - கிரிஇப்பான்வெவ பகுதியில் உள்ள சிறிலங்கா மகாவலி அதிகாரசபைக்குச் சொந்தமான காணியில் சட்டவிரோதமாகக் கட்டப்பட்டிருந்த கட்டிடம் உட்பட சேதமடைந்த சொத்துக்கான இழப்பீடு வழங்குவது தொடர்பிலேயே இந்த குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இந்தச் சொத்துக்கான இழப்பீட்டுக் கோரிக்கை முன்னதாக நிராகரிக்கப்பட்டிருந்த போதிலும் பிரதிவாதிகள் இந்த இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுள்ளதாக அரசுத் தரப்பு குற்றம் சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |