தெற்கில் மீண்டும் இனவாதத்தை தூண்ட முயற்சி : யாழில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கவலை
வடக்கில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை கடந்த காலங்களில்எடுத்தோம். இதனால் , வடக்கில் பல சட்டவிரோத செயல்களை கட்டுப்படுத்தி உள்ளோம் இந்த நாட்டில் அனைத்து மக்களும் ஒன்றிணைந்து சட்டவாட்சியை நடைமுறைப்படுத்த ஒத்துழைத்து வருகின்றனர்.
வடக்கு கிழக்கு தெற்கு மேற்கு என்ற எந்த பாகுபாடுகள் இன்றி அனைத்து மக்களுக்கும் ஒரே சட்டமே நடைமுறையில் உள்ளது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
தெற்கு அரசியல்வாதிகள் இனவாதத்தை தூண்ட முயற்சி
கோப்பாய் காவல் நிலையத்தை திறந்துவைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தனதுரையில் மேலும் தெரிவிக்கையில்,

தெற்கு அரசியல்வாதிகள், மீண்டும் ஆட்சிக்கு வருவதற்காக இனங்களுக்கு இடையில் குரோதத்தை ஏற்படுத்தும் விதமாக கருத்துக்களை தெரிவிக்கின்றனர் . ஆனால் நாட்டில் மீண்டும் இனவாதம் தலை தூக்க நாம் அனுமதிக்க மாட்டோம்
வடக்கு பகுதியில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி மக்களை சந்தோஷமாக சுதந்திரமாக வாழ வைப்போம். எளியோருக்கு ஒரு நீதியும் பிரபலமானவர்களுக்கு ஒரு நீதியும் என இந்த நாட்டில் இல்லை. அனைவருக்கும் பொதுவான நீதியே உண்டு.
அனைவருக்கும் சட்டம் சமம்
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு என்ற வகையில் அனைவருக்கும் சட்டம் சமம் என்பதையும் , காவல்துறையினர் பாரபட்சம் இன்றி சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என பணித்துள்ளோம்.

கட்சி, ஜாதி, இனம் மதம் என்ற எந்த வேறுபாடுகளும் இன்றி, அனைவரும் ஒரே இனம் என்ற சூழலை உருவாக்க வேண்டும். இந்த நாட்டில் மீண்டும் இனங்களுக்கு இடையில் முறுகல் நிலை ஏற்படமாட்டாது
இந்த பிரதேசத்தில் வாழும் உங்கள் பிள்ளைகள், உங்களின் எதிர்கால சந்ததியினர் இந்த நாட்டில் சந்தோசமாக ஒற்றுமையாக வாழ வேண்டும் அவ்வாறான சூழல் உருவாக வேண்டும். பிரிவினைவாதம் வேறுபாடுகள் தலைதூக்க அனுமதிக்க கூடாது. அவ்வாறான நிலை எதிர்கால சந்ததியினருக்கு ஏற்பட கூடாது.எமது பிரதான நோக்கம் எதிர்கால சந்ததியின் ஒற்றுமையான வாழ்வே. அதற்கு காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்
காவல்துறைக்கு கிடைக்கும் உயரிய விருது
காவல் நிலையங்களில் முறைப்பாடுகளுக்கு தீர்வு கிடைக்கா விடின், உயர் காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவியுங்கள். அல்லது காவல்துறை மா அதிபருக்கு சொல்லுங்கள்.தமக்கான நீதியினை பெற்றுக்கொள்ள அனைவருக்கும் உரிமை உண்டு காவல்துறைக்கு கிடைக்கும் உயரிய விருது , மக்களால் வழங்கப்படும் விருதாகும்.

எனவே மக்களின் நன்மதிப்பை காவல்துறையினர் பெற வேண்டும். அவ்வாறு நன்மதிப்பை பெற்றுக்கொள்வதே காவல்துறைக்கு கிடைக்கும் உயரிய விருதாகும்.
வடக்கில் மொழி பிரச்சனை இன்றி சேவைகளை பெற நடவடிக்கை எடுத்துள்ளோம். அதேபோன்று வடக்கில் உள்ள மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் , வடக்கில் சிறப்பான சேவையை மேலும் மேம்படுத்தவும் , வடக்கில் உள்ள இளையோரும் காவல்துறை சேவைகளில் தாமாக முன்வந்து இணைய வேண்டும் என மேலும் தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |