சிட்னி துப்பாக்கிச் சூடு: இலங்கையர் தொடர்பில் பிரதி அமைச்சரின் அறிவிப்பு
அவுஸ்திரேலியாவின் சிட்னியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் அங்கு வசிக்கும் இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவின் சிட்னி, பொண்டி கடற்கரையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடற்கரையில் தங்கியிருந்தவர்களை இலக்கு வைத்து இரண்டு துப்பாக்கிதாரிகளால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதுடன், இதில் இரண்டு காவல்துறை உத்தியோகத்தர்கள் உட்பட மேலும் 42 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிதாரிகளின் இலக்கு
சுமார் 1000 பேர் பங்குபற்றலுடன் சிட்னியின் பிரபலமான பொண்டி கடற்கரையில் நேற்று நடைபெறவிருந்த யூத சமூகத்தினரின் மத வழிபாட்டு நிகழ்வான 'ஹனுக்கா' (Hanukkah) கொண்டாட்டமே துப்பாக்கிதாரிகளின் இலக்காக இருந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

முதலாம் இணைப்பு
அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தின் போது துணிச்சலாக செயற்பட்ட பல உயிர்களைக் காப்பாற்றிய அந்நாட்டு பொதுமகன் ஒருவருக்கு பலரும் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர்.
சிட்னி நகரில் உள்ள பிரபலமான பொண்டாய் கடற்கரைப் பகுதியில் நடந்த இந்த துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குழந்தை உட்பட 16 ஆக உயர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த தாக்குதல் ஹனுக்கா (hanukkah) எனப்படும் யூதர்களின் நிகழ்வொன்றை இலக்கு வைத்து நடத்தப்பட்ட திட்டமிட்ட தாக்குதலாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.
உலகளவில் ஹீரோவாக திகழ்கிறார்
இந்நிலையில், துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களில் ஒருவரை தடுத்து அவரை கீழே வீழ்த்தி மேலும் பலரின் உயிர்களும் பறிபோகாமல் காப்பாற்றிய நபரின் காணொளி தற்போது சமூக ஊடகங்களில் அதிகளவில் பரவி வருகின்றன.

துணிச்சலுடன் உயிரிகளை காத்த நபர், பழக்கடை வியாபாரியான ஹமட் எல் அஹமட். 43 வயதான அவர் இரண்டு குழந்தைகளின் தந்தை என அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
அவுஸ்திரேலியாவை கடந்து அவர் உலகளவில் ஹீரோவாக திகழ்கிறார் என பலரும் கூறி வருகின்றனர். அவரது துணிச்சலான செயலுக்கு அவுஸ்திரேலிய பிரதமரும் பாராட்டியுள்ளார்.
துரதிஷ்டவசமாக இரண்டாவது துப்பாக்கிதாரியால் அவர் இரண்டு முறை சுடப்பட்டார். அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் குணமடைவார் என்று அதிகாரிகள் எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளனர்.
link - https://www.youtube.com/watch?v=IUEcLiZI6sI
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஜே.விபியால் தேசிய மக்கள் சக்திக்கு ஏற்படப்போகும் இறுதி பேரழிவு 9 மணி நேரம் முன்